நாம் ஒருவரை சந்திக்கையில் சிலரை உடனேப் பிடித்து விடும், சிலரைக் கண்டால் வெறுப்பாய் இருக்கும். காரணம் தெரியாது. அது முன்ஜென்மத் தொடர்பு காரணம் என்பார்கள் சிலர். அதுபோல், திரு சொ சொ மீ அவர்களுடனான தொடர்பு முன் ஜென்மத் தொடர்பு என்றும் சொல்லலாம்.
அவர் என் மீது ஏனோ ஒரு தனி விதமான அன்பினை செலுத்தினார். அவரைக் கண்டால் மாணவர்கள் அனைவரும் அடங்கித்தான் இருப்போம். அவர் வகுப்பில் எப்பொழுதும் உதாரணத்திற்கு என்னைத்தான் அடிக்கடி எதாவது சொல்லி வகுப்பினை நடத்துவார். திருமதி G D விஜயலட்சுமி அவர்கள் என்னை யாரெனத் தெரியவில்லை என்ற பொழுது சொ சொ மீ சார் என்னைத்தான் எதாவது சொல்வர் என்று சொன்னவுடன், நினைவுக்கு வந்துவிட்டது என்று சொல்லும் அளவு என்னை ஏதாவது சொல்லிக் கொண்டு இருப்பார்.
ஒருமுறை நான் வழக்கம்போல் தாமதமாக கல்லூரிக்கு வந்து கொண்டு இருந்தேன், மூலக்கரைப் பக்கம் வருகையில் இரு சக்கர வாகனத்தின் ஒலி கேட்டது. திரு சொ சொ மீ அவர்கள் வந்து கொண்டு இருந்தார்கள். சரி நம்மை ஏற்றிச் செல்வார் என்று நினைத்தால், நினைப்பில் மண்ணை அள்ளிப் போட்டுவிட்டு நேராக சென்று விட்டார். முதல் வகுப்பு அவருடையது. வந்தவுடன் attendance எடுத்தார். என் இலக்கம் 1150 வந்தவுடன், அவரே - "வந்துகிட்டு இருக்கான், மூலக்கரைப் பக்கம்" என்று சொல்லி present போட்டு விட்டார். இதனை நண்பர்கள் சொல்லித்தான் தெரியும்.
என் அண்ணன் காலையில் சீக்கிரம் எழ வேண்டும் என்பதற்காக செய்தித் தாள் போடும் வேலை செய்தார். அவர், திரு சொ சொ மீ அவர்கள் வீட்டிற்கும் தினசரி போடுவார். ஒருமுறை என் தம்பி உங்கள் வகுப்புதான் என்று சொல்லிவிட்டார். அது முதல் என் மீது இன்னும் அன்பு அதிகம் ஆகிவிட்டது. அவர் ஏதோ கஷ்டப்படும் குடும்பம் என நினைத்தாரோ என்னவோ தெரியவில்லை. மடக்கை அட்டவணை என்னும் Log Table ஐ நம் வகுப்பிற்கு ஒரு முறை எடுத்து வந்தேன். அதில் எண்கள் எல்லாம் பெரிதாக இருக்கும். அதைத்தான் அவர் வாங்கிப் பார்ப்பார். இது எங்கே உனக்கு கிடைச்சது? என்று கேட்டதற்கு என் அண்ணன் கொடுத்தார் என்று சொன்னதற்கு, உனக்காக உன் அண்ணன் எவ்வளவு கஷ்டப்படுறார் பார்? என்று சொன்னார்.
அவர் வீட்டிற்கு பலமுறை நண்பர்களுடனும், தனியாகவும் சென்று இருக்கிறேன். நன்றாக உபசரிப்பார். அவரிடம் என் மனத்தில் பட்டதை எல்லாம் தயங்காமல் சொல்லிவிடுவேன். ஒரு முறை நம் விரிவுரையாளர் ஒருவரின் முகவரியை யாருக்கோ சொல்லிக் கொண்டு இருந்தார். அவர் அடையாளமாக சில விஷயம் சொன்னார். அது முடிந்தவுடன், நான் சார் நீங்க அடையாளம் சொல்லும்போது சில விஷயம் சொன்னீங்க அதுல எனக்கு உடன்பாடு இல்ல. அத நீங்க இப்படித்தான் சொல்லி இருக்கணும் என்று தயங்காமல் சொல்லிவிட்டேன். அதற்கு, அவரும் சரிதான், இனிமே உன்கிட்டப் பாடம் கேட்டுகிட்டு இதெல்லாம் சொல்றேன், என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டார். ஆனாலும் அதனை ஒத்துக்கொண்டார்.
அவர் வகுப்பில் ஒரு நாள் நமது நண்பர் மகாதேவனுக்கு மூக்கில் இருந்து ர்த்தம் வந்தது, நான் கவனித்துவிட்டு, போய் கழுவிட்டு வாடா என்று சொன்னேன். அவரிடம் அனுமதி கேட்க ஏனோ தயங்கினான். உடனே நான் வேண்டுமென்றே சத்தமாக, என்னடா பயம்? என்று சொன்னேன். உடனே அவர் கோபமாக என்னிடம் திரும்பினார். நான் உடனே, சார் மூக்கில் ரத்தம் வருது, சார் கிட்ட கேட்டுட்டுப் போடான்னு சொன்னா , கேட்க பயமா இருக்குன்னு சொல்றான் சார். என்று சொன்னவுடன், போ போ போய் சரி பண்ணிக்கிட்டு வா என்று சொல்லிவிட்டு யாராவது கூடப் போங்க என்று சொன்னவுடன், நான் கிளம்பினேன். அவர் நீ இந்த classa cut பண்ணலாம்னு பாக்குறியா, நீ உக்காரு என்று சொல்லிவிட்டு நாகராஜனை அனுப்பினார்
வகுப்பில் ஒருமுறை அவர் சொன்னார், கிருஷ்ணமூர்த்தி உன் கையெழுத்து சுத்த மோசம் என்று, உடனே நான் பவ்வியமாக எழுந்து நின்று காந்தி கையெழுத்தும் நல்லா இருக்காதாம் சார் என்றேன், ஏன் உனக்கு compare பண்ண வேற ஆளே கிடைக்கலியா? என்று சொல்லி சிரித்தார். வகுப்பில் அவர் attendance எடுத்தவுடன், accountancy RL Gupta புத்தகத்தில் இருக்கும் பக்க எண், problem எண் எல்லாம் சொல்வார். நான் மட்டும் பழையப் பிரதி வைத்து இருந்ததினால் அவரே அந்தப் பக்கத்தை எடுத்துக் கொடுப்பார்.
அவரிடம் ஒருமுறை சந்தேகம் கேட்டேன், அவர் ஏற இறங்க என்னைப் பார்த்துவிட்டு, திருவிளையாடல் படத்தில் வரும் இந்த கேள்விய நீயா கேக்குறியா இல்ல யாராவது எழுதிக் கொடுத்தாங்களா என்ற பாணியில் கேட்டார். நானாகத்தான் கேட்கிறேன் சார் என்றவுடன் எனக்கு என்னவோ சந்தேகமா இருக்கு என்று சொல்லி சிரித்து பின்னர் விளக்கம் அளித்தார்.
ஆனால், விளக்கம் சொல்லும் முன் என்னைப் பார்த்து பெருமூச்செறிந்து, சிரித்து, தலை அசைத்துக் கொண்டது இன்னும் மறக்கவில்லை. (அது அமங்கலமான கேள்வியை இங்குப் பதிவிடவில்லை).
மாணவர்களிடம் அன்பையும் கண்டிப்பையும் சம அளவில் கொடுத்தார். Mass cut செய்து சென்றதற்கு கடுமையாக கடிந்து கொண்டார் என்றால், நாம் எல்லாம் நடத்திய வானவில் என்ற கையெழுத்துப் பத்திரிகை வெளியீட்டு விழாவில் திரு பு. மு. சாந்தமூர்த்தி அவர்கள் அட்டைப் படத்தில் இருந்த ஜோடிப் புறாவின் படத்தை கேலி செய்த பொழுது, அது தமிழும் ஆங்கிலமும் என்று விளக்கம் சொல்லி மாணவர்கள் சார்பாகப் பேசினார். அவர் குறை கூறுகையில், தன்னையே சொல்வது போல் முகம் வாடிப் போனார். அந்தப் பத்திரிக்கையினை நடத்த சில ஆலோசனைகளையும் வழங்க அவர் தவறவில்லை.
இவ்வளவு அன்பு என்னிடம் காட்டினாலும், மதிப்பெண் போடுகையில் எவ்வித சலுகையும் காட்டியதில்லை. நாம் செய்த Project Report இல் மிகக் குறைந்த மதிப்பெண் பெற்றது நான்தான் என்பது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த செய்தி.
நமது சந்திப்பு நிகழ்ச்சிக்கு அவரை அழைக்கும் பொறுப்பை நானேதான் செய்ய வேண்டும் என சீனிவாசன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அவரின் முகவரியினை இணையத்தில் தேடினேன் கிடைக்கவில்லை. ஆனால் , அவர் கம்பன் கழகத்தில் பேசுவதாக வந்த பத்திரிகை ஒன்று இணையத்தில் இருந்தது. அதில் இருந்த காரைக்குடி கம்பன் கழக எண்ணிற்கு தொடர்பு கொண்டு, அவர் எண்ணைப் பெற்று அவரிடம் பேசினேன். உடனே எவ்வித தயக்கமும் இன்றி, வருகை தர ஒத்துக்கொண்டார். ஆனால், கால சுழற்சியினால் அவர் என்னை நினைவில் இல்லை என்று சொன்னதைக் கேட்டு மனம் சற்று வருந்தியது உண்மை. ஆனாலும், நேரில் பார்த்தவுடன், இப்பொழுது உங்கள் முகம் சற்று ஞாபகத்திற்கு வருகிறது என்ற வார்த்தை கேட்டு மனம் மகிழ்ச்சி அடைந்தது.
அதன் பின்னர் தில்லியில் நடைப் பெற்ற தமிழ் இலக்கிய மாநாட்டிற்கு வருகை தரும் தகவலை அவரே என்னை அலைபேசியில் அழைத்து சொன்னபோது நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அவர் தில்லியில் இருந்த இரண்டு நாட்களையும் (பெரும்பகுதியினை) அவருடன் கழி(ளி)த்தேன். அவரின் உரையினைக் கேட்டு அவரிடம் நாம் அக்காலத்தில் நெருக்கமாக இருந்தும், தமிழ் கற்கத் தவறிவிட்டோமே என வருந்தினேன். அவர் நீங்க என்று மரியாதையாகவே விளித்தார் . நான் என்றும் உங்கள் மாணவன்தான் சார், நீங்கள் என்னை நீ என்றே அழைக்கலாம் என்று சொன்னதற்கு மறுத்துவிட்டார்.
சமீபத்தில், ரிஷிகேஷ் சென்று இருந்தேன். அவருக்கு கோவிலூர் வேதாந்த மடத்துடன் தொடர்பு உண்டு என்பதை அறிந்து இருந்தேன், அங்கு அந்த மடத்தில்தான் தங்கி இருந்தோம். அவரை அலைபேசியில் அழைத்து இந்த விஷயத்தை சொன்னவுடன், அங்கு பொறுப்பில் இருக்கும் அம்மையாரிடம் பேசி எங்களை நன்றாக கவனித்துக் கொள்ளச் சொன்னார். அவர் பேரை சொன்ன பிறகு இன்னும் நன்றாக கவனித்துக் கொண்டார்கள்.
5 comments:
ரொம்ப நல்லா இருக்கு especially திருவிளையாடல் comment.
PERFECT NOSTALGIA!!
தில்லி வருவதை அவரே தெரிவித்தது அறிந்து இன்ப அதிர்ச்சி. இது அவருடைய சகஜ உணர்வுக்கும் பெருந்தன்மைக்கும் எடுத்துக்காட்டு. உன் மூலமாக எனக்கும் அவரை சந்திக்கும் வாய்ப்பும் அவரது உரையை கேட்கும் அதிர்ஷ்டமும் கிடைத்தது. குறைந்தது 50 முறையாவது அந்த உரையைக் கேட்டிருப்பேன். Thanks to the technology! கூடவே அந்தக்காலத்தில் இந்த வசதி இல்லாமல் போய் விட்டதே என்ற எண்ணமும் வந்தது. நீ சொன்னது மிக மிக சரி, படிக்கும் காலத்தில் இது போன்ற வாய்ப்பைத் தவற விட்டு விட்டோம்.
அவர் கலாய்த்தது உன்னை என்றாலும் களித்தது நாங்கள் எல்லோரும்.
கிருஷ்ணா இந்தப்பதிவும் மிகச்சிறப்பாக வந்துள்ளது . நீ அதிகமாக எழுதியும் சட்டென்று முடிந்தது போலிருந்தது. தினசரி என்று எழுதுவதற்குப்பதில் செய்தித்தாள் என்று எழுதியிருந்தால் இன்னும் சிறப்பாகயிருக்கும் என்று கருதுகிறேன். சொ சொ மீ அவர்கள் உன்னை கம்பீரமாக 'கிருஷ்ணமூர்த்தி' என்று அழைப்பாரே அது ஒன்றே போதுமே...! கிருஷ்ண, அவர் உன்மேல் எவ்வளவு அன்பு வைத்திருந்தார் என்பதிற்கு ?
செய்தித்தாள் comment க்கு நானும் ஆமோதிக்கிறேன்.
திருத்தம் செய்யப்பட்டு விட்டது. @விஜி, அன்வர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
Post a Comment