Tuesday, 7 May 2013

ஊட்டி சுற்றுலா (பகுதி -1)



கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பகிர்ந்து கொண்ட கல்லூரிக்கால நினைவுகளுக்குப்பின்னர் இதோ... ஐந்து மாதங்கள் கடந்தோடி விட்டன.   கிருஷ்ணன்கூட அவனுக்கே உரித்தப்பாணியில் ..என்ன தம்பி? இன்னமும் சைக்கிளுக்கு பஞ்சர் ஒட்டவில்லையா?....... என்று சென்றமுறை பகிர்ந்து கொண்ட சைக்கிள் பயணத்திற்கு பிறகு பெரிய தொய்வு ஏற்பட்டதைப்பற்றி குறிப்பிட்டிருந்தான்.  இரத்த ஒட்டத்துடன் கலந்துவிட்ட கல்லூரி கால நினைவுகளை ஆயுள் முழுவதும் பகிர்ந்து கொள்ளலாமே என்ற ஆழமான நம்பிக்கைத்தான் அவ்வப்பொழுது எடுத்துக்கொள்ளும் நீண்ட இடைவெளிக்கு காரணம்.  

கிருஷ்ணா விஷயத்தில் ஒரு வருத்தமான ஒரு நிகழ்வு என்னவென்றால் அவனும் எங்களுடன் N.C.C யில் இருந்திருக்கிறான் என்பதையும்
சைக்கிள் பயணத்தில் அவனும் கலந்திருந்திருக்கிறான் என்பதையும் என்னால் எப்படி மறக்க முடிந்திருக்கிறது என்பதுதான் அது?....  அவன் கல்லூரிகால நண்பனாகயிருந்திருந்தும் எங்கள் குழுவில் நெருக்கமாக பழகாததாலும்  வெளியிலிருந்து ஆதரவு மட்டும் கொடுத்ததாலும் அவன் எங்களோடு எந்த விஷயத்தில் பங்கெடுத்து கொண்டான் எதில் விலகியிருந்தான் என்பதை சரிவர நினைவுகூற முடியவில்லை. நல்லவேளை அவனும் பல சம்பவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்வதால் மறந்த நினைவுகளை சரிசெய்து கொள்ளக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்கிறது.  மேலும் அவன் எந்தக்காலத்திலும் கற்பனை உலகத்தில் வாழ்ந்ததேயில்லை எப்பவுமே நிகழ்காலம் தான் அவனுக்கு. இந்த ஒரு காரணத்தினாலே அவன் கூட நெருங்கி பழக எனக்கு எப்பவுமே பயம் தான். நண்பர்கள்  நாங்களெல்லாம் கலகலப்பாக காடு மேடென்று திரிந்த போதெல்லாம் காலாட்டிக்கொண்டே கவர்மெண்ட் பரிட்சைகளுக்கு படித்தவன் அவன்!!!!! ஒருவர் பொறை இருவர் நட்பு என்பது தான் உண்மை அவன் என்னை பொறுத்துப்போனதால் எங்களது நட்பு இன்னமும் தொடர்கிறது.

பெரும்பாலும் மனம் லயித்துப்போன விஷயங்கள் மட்டுமே பசுமையாக எப்போது நினைத்தாலும் சுகந்தமாகயிருக்கும்.  மனப்பூர்வமான ஒத்த மனநிலை கொண்ட நண்பர்களுடன் பயணிக்கும் அனுபவம் அற்புதமானது.  சிறகடித்து பறக்கும் எண்ணங்கள், பூப்பூவாய் போய்விடும் மனம், நிறைந்துவழியும் மனம் இவைகளெல்லாம் நட்பில் மட்டுமே சாத்தியம்.  அந்தவிதத்தில் நான் மிகுந்த பாக்கியசாலி. எனது நண்பர்கள் மூலம் அந்த அனுபவங்களையெல்லாம் நான் அடையக்கூடிய சந்தர்ப்பங்கள் பலமுறை வாய்த்திருந்தது. அப்படி அமைந்த  அருமையான சந்தர்ப்பத்தில் ஒன்று தான் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும் போது நாங்கள் சென்று வந்த ஊட்டி சுற்றூலா.

கல்லூரியில் படிக்கும் சமயங்களில் மகாதேவன் தான் தடபுடல் பார்ட்டி. அடிக்கடி பாம்பே போவது, ஹோட்டல் போவது என்று பசையுள்ள (!!) ஆளாகயிருந்தான். செலவழிக்க அஞ்சாத ஆசாமி அவன். அடிக்கடி நாங்கள் பேசும் போது ஏதாவது ஒரு ஊருக்கு போய்வரலாமா..? என்று பலமுறை திட்டம் போட்டிருக்கிறோம்.
ஒருசமயம் தீடிரென்று தேவனுக்கு லக்கி பிரைஸ் அடித்தது போல் ஒரு ஆயிரம்ரூபாய் கிடைத்திருந்தது. அந்தகாலக்கட்டத்தில் ஆயிரம் ரூபாய் என்பது ஆ.....!!!!!!! வென்று வாயைப்பிளக்க வைத்துவிடும். அவ்வளவுதான் டூர் ப்ரோகிராம் உடனே தயாராகிவிட்டது. தேவனுக்கு தெரிந்த ஒருவர் குன்னூர் எஸ்டேட்டில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அவரைத் தொடர்பு கொண்டு விபரம் கேட்டதில் அவர் வேலை பார்க்கும் எஸ்டேட்டில் அழகாக தங்கிக்கொண்டே ஊட்டியை சுற்றிப் பார்க்கலாமென்று உறுதியாக சொன்னதும் எங்களுக்கெல்லாம் (சீனி, நாகு, தேவன், நான்) உற்சாகம் ஓவர்டைம் வாங்க ஆரம்பித்தது.  போர்க்கால நடவடிக்கைகளாக காரியங்கள் ஜரூராக நடந்தேறியது.  தேவன் வீட்டில் அவன் தான் ராஜா...!!! மற்ற நண்பர்களெல்லாம் அவரவர் வீட்டில் சொல்லி கெஞ்சிக் கூத்தாடி அணில் ராமர் பாலத்திற்கு கல் எடுத்துப்போட்டது போல் நாங்களும் எங்கள் பங்கிற்கு பணம் கொண்டு வந்து சுற்றூலாவிற்கு சுறுசுறுப்பாய் தயாரானோம்.
வெளியூர் செல்வதில் தேர்ந்திருந்த தேவன் ஊட்டி செல்வதற்கான டிரெயினில் டிக்கெட் வாங்கும் வேலைகளை சூப்பராக கவனித்துக் கொண்டான். 1984 ம் வருடம் எந்த மாதம் எந்த தேதி என்ன கிழமை என்பதெல்லாம் சரியாக தெரியவில்லை. வசந்தமயமான ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு தினத்தின் இரவில் எங்களின் இனிய பயணம் துவங்கியது. இரவு புறப்பட்ட ரயில் மறுநாள் காலை ஆறுமணியளவில் மேட்டுப்பாளையம் அடைந்தது. 

மேட்டுப்பாளையத்திலிருந்து தான் ஊட்டிக்கு மலைரயில் கிளம்புகிறது. மனம்கொள்ளா பரபரப்புடனும் திரில்உடனும் வேகவேகமாக தயாராகி மேட்டுப்பாளையம் ரயில்வே ஸ்டேஷனில் மற்றோரு பக்கம் நின்று கொண்டிருந்த மலை ரயிலை நோக்கி ஓடினோம். வாவ்.........!!!! 
ஜேம்ஸ்பாண்ட் படங்களில் வருமே அந்தமாதிரி முற்றிலும் விநோத அமைப்பில் நீல கலரில் ஏழெட்டு கம்பார்ட்மெண்ட்டுகளுடன் ஜல்லிக்கட்டு காளைபோல் உஷ்.... உஷ்.... என்று நீராவியை விசிறியடித்தவண்ணம் ஜம்மென்று பிளாட்பாரத்தில் நின்று கொண்டிருந்தது. சின்னபசங்க யானையை சுற்றி சுற்றி பார்ப்பார்களே...!!!! அது போல் அந்த இயந்திர கஜத்தை ஆவலோடு ஒவ்வொரு பெட்டியாக ஏறி ஏறி பார்த்தோம்....பரவசந்தோம்...!!!! 


முதல்வகுப்பு இரண்டாம் வகுப்பு என்று இரண்டு வகையில் கம்பார்ட்மெண்ட் இணைக்கப்பட்டிருந்தது. முதல்வகுப்பு பெட்டியில் எதிரும் புதிருமாக இரண்டு வரிசைகளில்  மெத்தைப்போட்ட சீட் போடப்பட்டு  சின்னதாக அழகாகயிருந்தது.  
இரண்டாம் வகுப்பு பெட்டி பஸ்ஸிலிருப்பது போல் ஒரேபக்கம் பார்த்தபடி பத்து வரிசைகளுக்கு மேல் நீள நீளமான சீட்கள் போடப்பட்டு பிரமாதமாகயிருந்தது. மலைக் காட்சிகளை ரசிப்பதற்காகவே கீழேயிருந்து மேலே தூக்கும் வகையில் முழுக்க முழுக்க கண்ணாடி ஜன்னல்களாகவே பொருத்தப்பட்டு மலைரயில் சூரியவெளிச்சத்தில் எந்த ஒளிவு மறைவுமில்லாமல் ஜெகஜ் ஜோதியாக மின்னிக்கொண்டிருந்தது. 

இவ்வளவு கனமான ரயில் பெட்டிகளையும் சுமைகளையும் ஆட்களையும் அனாயாசமாக அவ்வளவு உயரத்திற்கு தள்ளிக்கொண்டு செல்லும் அந்த விசேஷமான நீராவி இன்ஜினை பார்ப்பதற்கு ரொம்ப பிரமிப்பாகயிருந்தது. 
ஏராளமான பைப்புகளுடனும், சிலிண்டர்களுடனும், கிராங்க் ஷாப்டுகளுடனும், கொதி கலன்களுடனும், பிரமாண்டமான இரும்பு சக்கரங்களுடனும், எண்ணிறந்த இரும்பு ராடுகளுடனும், கசகசவென்று வழியும் கீரீஸ்களுடனும், ஆயில்களுடனும், காணும் திசையெல்லாம் கொதிக்கும் நீராவியை உமிழ்ந்தவண்ணம் அருகில் செல்லும் போது அனல்பிளம்பாய் தகித்துக் கொண்டிருந்தது....!!!!!!!! 



நேரமாக…..நேரமாக....... ப்ளாட்பாரம் உல்லாச பயணிகளால் நிரம்பி வழிந்தது.  எங்களுக்கான இரண்டாம் வகுப்பு ரயில் பெட்டியில் ஏறிய சிறிது நேரத்தில் கூ......கூஉ....... கூஊஉ........ பெரிதாக சப்தம் எழுப்பிக்கொண்டே......... நீராவி இன்ஜீன் பின்புறமிருந்து தள்ள..... மலைரயில் தனது மகத்தான பயணத்தை துவக்கியது.


நீலகிரி மலையில் அமைந்திருக்கும் ஊட்டி என்றும் உதகமண்டலமென்றும் அழைக்கப்படும் அந்தவிடத்தின் வரலாற்று சம்பந்தப்பட்ட சில விபரங்களை முதலில் சொல்லிவிடுகிறேன். நீலகிரி மலைப்பாதை  ஒருவழிப்பாதையாக  அமைக்கப்பட்ட ரயில் வழிப் பாதையாகும்.  மொத்த தூரம் 46 கிலோமீட்டர் (29 மைல்) மீட்டர்- கேஜ் ரயில்பாதை ஜூன் மாதம் 1899 ஆம் ஆண்டு அன்று முதன்முதலில் துவங்கப்பட்டபோது குன்னூர் வரைதான் சென்றது  அப்புறம் 15ம் தேதி அக்டோபர் 1908 அன்று உதகமண்டலம் வரை நீட்டிக்கப்பட்டது. 

இந்தியாவிலுள்ள alternate biting system commonly termed as rack and pinion system and is operated with special steam locomotives.  This system is described in Sir Gulford L.Molesworth’s report of 1886, which says “Two distinct functions  - 1st that of traction by adhesion as in ordinary loco; 2 that of traction by pinions acting on the track bars.  
The brakes are four in number – two hand brakes, acting by friction; and two acting by preventing the free escape of air from cylinder and thus using compressed air in retarding the progress of the engine.  The former are used for shunting whilst the latter for descending steep gradients. One of the handbrakes acts on the tyres of the wheels in the ordinary manner and second acts on grooved surfaces of the pinion axle, but can be used in those places where the rack is laid.

நீலகிரி மலைப்பாதையில் ரயில் மொத்தமாக கடந்து செல்லும்  46 கிலோமீட்டரில் 208 வளைவுகளையும் 16 மலை குடைவுகளையும் 250 பாலங்களையும்  தாண்டி செல்கிறது. மலைரயில் மேலே ஏறுவதற்கு 290 நிமிஷங்களும், இறங்குவதற்கு 215 நிமிஷங்களும் எடுத்துக்கொள்கிறது. நீலகிரியின் சிகரம் கடல் மட்டத்திற்கு மேல் 2,268 மீட்டர் உயரமுள்ளது.



மேட்டுப்பாளையம் ஸ்டேஷனை விட்டு மிதமான வேகத்தில் மலைரயில் கிளம்பி அடிவாரத்தை கொஞ்ச நேரத்தில் கடந்து நீலகிரி மலையை நெருங்கி ஏறுமுகமாகயிருக்கும் பினியங்கள் பதிக்கப்பட்டிருக்கும் இரும்புப்பாதையில் பிடித்து பிடித்து தடக்... தடக்... தடக்கென்று குலுக்கலுடன் மெதுமெதுவாக மலையேற துவங்கியது. மந்திரம் நிகழ்ந்தது போல் சீதோஷ்ண நிலை சடாரென்று மாறியது ..!! குளிர் காற்று சீலிரென்று வீசியது. உடம்பின் ஒவ்வொரு நரம்பிலும் சில்லென்று உணர்வு பரவியது. காதுக்குள் இரைச்சலாக சத்தம் .... அப்புறம் அடைக்க ஆரம்பித்தது நாகு, சீனீ, தேவன் மூவர் முகத்திலும் சந்தோஷம் கொப்பளிப்பதை நன்றாக உணரமுடிந்தது. சமதளத்தில் ரயில் பயணம் செய்தே பழகியிருந்த எங்களுக்கு மலைப்பாதையில் அவ்வளவு பிரமாண்டமான ரயில் சத்தியத்திற்கு கட்டுப்பட்டுப்பட்டது போல் சாவதானமாக செல்வதை பார்க்க... பார்க்க பூரிப்பாகவும் திரில்லாகவும் இருந்தது. பிரிட்டிஷ்காரர்களை நினைக்கும் போது பொறாமையாகத்தானிருக்கிறது. வேலையென்று வந்துவிட்டால் என்னமாய் மெனக்கெடுகிறார்கள்.!!!! ஆண்டவா... கடல் மட்டத்திலிருந்து 2,268 அடி தூரம் உயரத்திலிருக்கும் ஊட்டிக்கு அதுவும் ரயில் பாதை மூலம் மலை மலையாய் தாண்டி அந்த சிகரத்தை அடைவதற்கு  எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்கள். ஏராளமான பாலங்கள் கட்டி.. மலைகளைப்பூராவும் இணைத்து சிலவிடங்களில் மலையைக் குடைந்து... அம்மாடி..... நினைக்கும் போதே மனசெல்லாம் வலிக்கிறது..!!!! எண்ணித்துணிக கருமம்..., எண்ணியாங்கெய்துபர் எண்ணியர் திண்ணியராகப்பெறின்..... இந்தக்குறள்களுக்கெல்லாம் ரொம்பப் பொருத்தமானவர்கள் பிரிட்டிஷ்காரர்கள். எத்தனை காட்டுவிலங்குகள் இருந்திருக்கும்..? எத்தனை கொடிய விஷப்பூச்சிகள் இருந்திருக்கும்..?  எத்தனை மண்சரிவு ஏற்பட்டிருக்கும்..? எத்தனை வெள்ளம் வந்திருக்கும்..? எத்தனை ஊழியர்கள் எதிர்பாராத விபத்தில் சிக்கியிருப்பார்கள்..? எத்தனையோ வருடங்களுக்கு பணமும் உழைப்பும் சிந்தி கனவை நினைவாக்கி இன்று களிப்பான உலாவர உதவியிருக்கிறார்கள். 250 பாலங்கள் அதுவும் மலைமேல், 16 மலைகுடைவுகள் எவ்வளவு கடினம்..? உழைப்பு, உழைப்பு, அர்ப்பணிப்பு, அறிவு, ஆற்றல், கடினமான முயற்சி, விடாப்பிடியான அணுகுமுறை, பொறியியல்திறன், அடைந்தே தீருவோம் என்னும் நம்பிக்கை, ஏராளமான இழப்புகள், வெற்றி ஒன்றே குறி இந்த வார்த்தைக்களுக்கெல்லாம் அன்று தான் உண்மையான அர்த்தத்தை கண்டேன். சிலவிடங்களில் ஒருமலை விட்டு அடுத்தமலைக்கு பாலத்தில் செல்லும் போது கீழே பார்த்தால் அடிவாரம் அவ்வளவு அதலபாதாளத்தில் தெரிகிறது...!!! பிரமிட் உயரத்திற்கு கீழேயிருந்து பாலத்தின் கற்தூண்களை எழுப்பி இரண்டு மலைகளையும் சேர்த்து ரயில் பாதையை இணைத்திருக்கிறார்கள். சமதளத்தில் கான்கிரீட் தூண்கள் எழுப்பும் போதே பிரமாண்டமாய் சாரம் கட்டி செய்வார்கள்.  இந்த மலைப்பாதையில் அதுவும் பிரமிட் உயரத்திற்கு ஏராளமான கற்தூண்கள் எழுப்பும் போது எப்படி சாரம் கட்டினார்கள்..? எந்தவிதமான பொறியியல் வித்தையை உபயோகித்து இந்தப் பாலங்களை கட்டினார்கள்..? பாலத்தில் பயணிக்கும் போதே படபடப்பாயிருக்கிறது ..?? அவைகளை கட்டும் போது எத்தனை பேர் துடிதுடித்திருப்பார்களோ..?? சின்ன தவறுகூட மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தக்கூடிய ஆபத்தான அந்த மலைப்பாதையை அவ்வளவு அற்புதமாக நிர்மாணித்திருக்கிறார்கள். மலையின் ஒருபக்கம் பெரும்பாலும் பக்கச்சுவராக வரும்விதத்தில் பாதையை அமைத்து மற்றொரு மலைக்கு செல்லும் போது கற்தூண்களை உயரமும் சின்னதுமாக உபயோகித்து 250 பாலங்களை சமமாக நிர்மாணித்து 16 இடங்களில் மலையை குடைந்து வாவ்..... வாவ்........உழைப்பின் உன்னதத்தை உண்மையாக காட்டியிருக்கிறார்கள். 



அவர்கள் பட்ட அவ்வளவு கஷ்டமும் வீண்போகவில்லை...!! பச்சை பசேல் என்றிருக்கும் மலையின் இருபுறமும் ஓங்கி வளர்ந்திருக்கும் யூகலிப்ட்ஸ், தேக்கு இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ வகை மரங்களுக்கு மத்தியில் ஜிலுஜிலுவென்று... நீராவி கூவலுடன் குபு குபுவென புகையைக் கக்கிக்கொண்டு.... மலை ரயில் செல்லும் போது.... அந்த சப்தம் மலையில் எதிரொலிக்கும் போது நமக்குள் ஏற்படும் சிலிர்ப்பு அலாதியானது. மகாகவி பாரதியாரின் கவிதைவரிகள் தான் நினைவுக்கு வருகிறது.

இந்த புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக்கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டு புல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ
மானுடர் உழாவிடினும்  வித்து நடாவிடினும்
வரம்பு கட்டாவிடினு மன்றி நீர் பாய்ச்சா விடினும்
வானுலகு நீர் தருமேல் மண்மீது மரங்கள்
வகை வகையா நெற்கள் புற்கள் மலிந்திருக்கு மன்றே?
யா னெதற்கு மஞ்சுகிலேன், மானுடரே, நீவிர்
என் மதத்தை கைக் கொண்மின்; பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்கு தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்

எவ்வளவு உண்மை...!! மனிதர்களின் முயற்சியெதுவில்லாமல் பிரமாண்டமாக படர்ந்து கிளைத்துக்கிடக்கும் அந்த மலையின் ஒரு சின்ன இடம் கூட பாக்கியில்லாமல் மரம், செடி, கொடி, புல், பூண்டென்று பூத்துக்குலுங்கியதை பார்க்கும் போது நமக்கு தொழில் அன்பு செய்வது ஒன்றுதான் என்பது உறுதியாகிறது.

அதேபோல் மலைக்குகைக்குள் ரயில் பயணிக்கும் போது வரும் இருளும் ரயில் சத்தத்தின் எதிரொலியும் பயணிகள் உற்சாகத்தில் கத்தும் ஓசையும் தித்திக்கும் திரில் அனுபவம். ரயில் இடையில் பல ஸ்டேஷன்களில் நின்று தண்ணீர் பிடித்துவிட்டு செல்லும். 

அந்த ஸ்டேஷன்களிலெல்லாம் சுடச்சுட டீயும் பஜ்ஜியும் கிடைக்கும்.  அங்குள்ள டீயின் சுவை அலாதியானது. கிடுகிடு குளிரிலும் சுடச்சுட டீ கிடைப்பதுதான் அந்த ஊரின் சிறப்பு. ஒரு ஸ்டேஷன் கூட விட்டு வைக்காமல் ஒவ்வொரு ஸ்டேஷனிலும் டீ சாப்பிட்டோம். அந்த ஜில் குளிரில்....!!! எங்களைச்சுற்றி சூழ்ந்திருக்கும் பவித்ரமான இயற்கை எழில்களின் மத்தியில் ஜிலுஜிலுவென குளிர்ந்த காற்று வருடிவிட்டு செல்லும் ஆனந்தமயமான அந்த தருணத்தில் சூடாகவும் சுவையாகவும் இருந்த அந்த டீயை அருந்தும் போது அத்தனை நாடி நரம்புகளும் நன்றி சொல்லின. நாகு தான் ரொம்பவும் ரசித்து ருசித்து சாப்பிட்டான். தேவனும் சீனியும் ஆமோதித்தனர். டீயை ‘ஜென் விருந்தில் பங்கேற்பது போல் அர்ப்பணித்து அருந்திக்கொண்டிருக்கும் போதே ரயில் கிளம்பிவிடும். ஆனாலும் ஆற அமர டீயை குடித்து விட்டு ஜாலியாக தோளில் கைப்போட்டுக் கொண்டபடி மலைக் காட்சிகளின் அழகை ரசித்தப்படியே....!!! முக்கி முணங்கி மலையில் ஏறிக்கொண்டிருக்கும் ரயிலில் சாவகாசமாக ஏறி அமர்ந்துகொள்வோம்.  சொர்க்கமயமான காட்சிகள் வரும் வழியில் ஏராள ஏராளமாய் கொட்டிக்கிடக்குது. முதலில் ஒரு இடத்தின் அட்டகாசமான இயற்கை வனப்பில் மனம் பறிகொடுத்து அதைப்பற்றி பேசி வந்து கொண்டிருப்போம். அதற்குள் அதைவிட சூப்பரான மற்றொரு இயற்கை வனப்பு எங்கள் கவனத்தை கொள்ளைக்கொள்ளும். !!!! குறிப்பாக சாலை வழியில் வரும் ஹேர்பின் பெண்ட் என்று சொல்லப்படும் கொண்டை ஊசி வளைவுகளுக்கு மேலாக ரயில் செல்லும் போது அந்த ஆபத்தான வளைவுகளில் கார்களும், பஸ்களும் திறமையாக ஓட்டப்பட்டு வளைந்து நெளிந்து வருவதை பார்க்கும் போது திரில் அடிவயிற்றை கவ்வும். ஒரு ஸ்டேஷனில் ரயில் நின்றபோது மிக அருகாமையில் சற்றுப்பள்ளத்தில் ஒர் அருவி தெரிந்தது.  உடனே ஒரே ஓட்டம் தான்...  மலையின் பசுமையில் வெண்பஞ்சு திரல்களாக நீர் வழிந்து வருவதை கண்கொட்டாமல் பார்த்து ரசித்தோம். 



பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா –
நின்றன் பச்சை நிறந் தோன்றுதையே நந்தலாலா.!!!! 

திரும்பும் திசையெல்லாம் பசுமையாய்..... பனியாய் .... மலராய்.... புதுமையாய்........ பரிசுத்தமாய்...... பிரகாசமாய்..... பளிங்காய்.....  சுவாசிக்கும் காற்றெல்லாம் மணந்தது .... பார்க்கும் கண்களெல்லாம் குளிர்ந்தது......ஸ்பரிஸிக்கும் தேகமெல்லாம் சிலிர்த்தது..... உடல் குளிர்ந்து .....  உணர்வு உற்சாகமாகி..... உள்ளம் குவிந்து ... எதிர்மறை எண்ணங்களெல்லாம் அவிந்து போய் ஏகாந்தத்தில் ஐக்கியமாகி.....  உவகை !!!! உவகை !!!! உவகை!!!!

“இனி என்னைப் புதிய வுயிராக்கி –
எனக் கேதுங் கவலை யறச் செய்து –
மதி தன்னை மிகத் தெளிவு செய்து –
என்றும் ஸந்தோஷங் கொண்டிருக்கச் செய்வாய்

என்று மகாகவி பாரதியார் கேட்ட வரம் அன்று எனக்கு மிகவும் பொருத்தமாகயிருந்தது....!! மணிரத்னம் படத்தில்... தக.....தைய்யா.. தைய்யா.  தைய்யா..  தக.... தைய்யா.... தைய்யா.. தைய்யா என்ற பாடல் காட்சியில் ஷாருக்கான் அவர்கள் அமர்க்களமாக ஆட்டம் போடுவாரே!!!! அது இந்த மலைரயிலில் தான். அந்தப்பயணத்தில் காலம் கரைவது தெரியாமல் ஆனந்தத்திலும் ஆச்சரியத்திலும் ஒவ்வொருவரும் கரைந்து போயிருந்தோம். மூன்று மணிநேரம் போனதே தெரியவில்லை. குன்னூர் ஸ்டேஷனில் ரயில் நுழைந்து பெருமூச்சு விட்டதும்...! மனசெல்லாம் மத்தாப்பூவாய் மாறிய மனிதர்களாய்...!! எங்கள் உடமைகளின் சகிதம் இறங்கினோம். 


குன்னூர் ஸ்டேஷன் உல்லாச பயணிகளின் கூட்டத்தால் நிரம்பி கலகலவென்று பரபரப்பாகயிருந்தது..! சுகந்த காற்றை சுவாசித்துக்கொண்டே தேவனின் நண்பனிருக்கும் எஸ்டேட் இருக்கும் இடத்தை விசாரித்துக் கொண்டு அந்தத்திசையில் நடக்கத் துவங்கினோம். ஊரின் அமைப்பு ரொம்ப புதுமையாகயிருந்தது. மேடு பள்ளம் இது தான் அங்குள்ள தாரகமந்திரம். எந்தப்பக்கம் ரோடு ஆரம்பிக்கிறது? எந்தப்பக்கம் வீடு இருக்கிறது? என்பதை சட்டென்று கணிக்க முடியாதளவிற்கு சகட்டுமேனிக்கு வளைந்து நெளிந்து ரோடுகளும்... வீடுகளும்.... அடுக்கடுக்காய்... கொத்துக்கொத்தாய்.. கிரிக்கெட் க்ரௌண்ட் காலரி போல... வித விதமாய்... சரிவாய் சாலை...  ஏணிப்படி  மாடிப்படிகளுக்கு மேல் வீடு.... அடேங்கப்பா......!!  மலையின் அத்தனை கோணத்திலும் வகைவகையாய் வீடுகள்... தேயிலைத் தோட்டங்கள்... சாலைகள்... செல்வம் தெரிந்தது... செழிப்பு தெரிந்தது.... சிலவிடங்களில் எளிமை தெரிந்தது. ஆனால் செல்லுமிடமெல்லாம் தெரிந்த இயற்கையின் அழகு ஏழ்மையை தெரியவிடாமல் செய்துவிட்டது. தமிழ்நாட்டில் நான் பார்த்த ஊர்களில் கொஞ்சம் கூட முகம் சுழிக்காமல் ரசித்த இடம் குன்னூரும் ஊட்டியும் தான்..!!!
   
மறுபடியும் மலரும்....

6 comments:

VJ said...
This comment has been removed by the author.
VJ said...

துவக்கமே கலக்குகிறது. இதுவரை பார்த்திராத கேள்வி மட்டுமே பட்டிருந்த ஊட்டி ரயிலில் காசு செலவில்லாமல் சென்ற அனுபவம் கிடைத்தது. இப்பொழுது தான் சுற்றுலா துவங்கியிருக்கிறது. பகுதி-1 என்று குறித்திருப்பது இன்னும் களை கட்டும் என்பதற்கு கட்டியம் கூறுவது போல் உள்ளது.

VJ said...

காலாட்டிக்கொண்டே கவர்மெண்ட் பரிட்சைகளுக்கு படித்ததனால்தான் இப்பொழுது கால் மேல் கால் போட்டுக்கொண்டு கவர்மெண்ட் உத்தியோகம் பார்க்க முடிகிறது.

சிறியவன் said...

@VJ அதுவும் facebook, blogspot எழுதிகிட்டு :D

சிறியவன் said...

"பிரமாதம்" (இது அவ்வையின் வரப்புயக்கு சமமாக கொள்ளவும்.)

VJ said...

@சிறியவன், ஆமாம் இல்லையா பின்னே!!