திரு சொ சொ மீ சுந்தரம் அவர்கள் குறித்த ஒரு தொகுப்பு அவரிடம் இருந்து எனக்கு கிடைத்தது. அதனை இங்கே பதிவிட்டுள்ளேன்.
திரு சொ சொ மீ அவர்கள் 7.8.1943 அன்று தெய்வத்திரு சொர்ணலிங்கம் செட்டியார், தெய்வத்திரு மீனாட்சி ஆச்சி ஆகியோருக்கு மகவாகப் பிறந்தார். அவர் தன் கல்லூரிப் படிப்பினை காரைக்குடி அழகப்பக் கல்லூரியில் இளம் வணிகவியலையும் (B. Com ), முது வணிகவியலினை பச்சையப்பன் கல்லூரியிலும், M.Phil பட்டத்தை மதுரைக் காமராசர் பல்கலைகழகத்திலும் பெற்றார். வணிகவியலில் பட்டம் பெற்று பணி செய்தாலும் முனைவர். வ.சுப. மாணிக்கனார், கம்பனடிப்பொடி என வழங்கப்படும் தெய்வத்திரு காரைக்குடி சா. கணேசன் ஆகியோர் தூண்டுதலினால் தமிழ் பயின்று, படிக்கும் காலத்தில் பலகலைக் கழக மரபுக் கவிதைப் போட்டி, சென்னை மாணவர் மன்ற கவிதைப் போட்டி ஆகியவற்றில் மரபுக் கவிதை எழுதி முதல் பரிசு பெற்றுள்ளார்.
1962 முதல் இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களிலும், சிங்கப்பூர் மற்றும் இலங்கையிலும் நடைபெறும் கவியரங்குகளில் பங்கு பெற்று, பின்னர் தலைமையும் ஏற்றுள்ளார். `1981 ஆம் ஆண்டு மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில், கவியரசர் கண்ணதாசன் தலைமையில் நடைபெற்ற "தலையாய தமிழுக்கு நிலையாய மகுடங்கள்" என்றத் தலைப்பில் 400 வரி மரபு கவிதைக்கு பொற்கிழிப் பெற்று, "பொற்கிழிக் கவிஞர்" ஆனார். கவியரசால், சொல்லுக்கு சொல் மீறும் சுந்தரம் என்றப் பாராட்டைப் பெற்றார்.
1999 ல் மதுரை ராஜா மன்றத்தில் தமிழிசை சங்கத்தினரால் தமிழ் பணிக்காக மீண்டும் ஒரு பொற்கிழிப் பெற்றார். 2002 ல் சென்னை கம்பன் கழகம், 2005 ல் முன்னாள் அமைச்சர் இராம. வீரப்பன் அவர்களின் 80 வது அகவை கொண்டாட்டம், இவற்றில் பாராட்டு பெற்றார். 2009 ஆம் ஆண்டு திருவாவடுதுறை ஆதீனத்தால் "தமிழாகமச் சிந்தனைச் செல்வர்" என்றப் பட்டம் சூட்டப் பெற்றார்.
மதுரைத் திருப்புகழ் சபையினில் மாதந்தோறும் திருப்புகழ் விரிவுரை நிகழ்த்தி வரும் இவர், மதுரை கம்பன் கழகப் பொருளாளராக பணியாற்றுவதோடு, 2003 ஆம் ஆண்டு முதல் மதுரையில் திருவாசக விழா நடத்தி வருகிறார். இவர் திருப்புகழையும், திருவாசகமும் முற்றும் கற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இது மட்டுமல்லாது திருமந்திரம், பெரிய புராணம், கந்தபுராணம், கம்ப ராமாயணம், அபிராமி அந்தாதி, வில்லி பாரதம், திருவருட்பா, திருப்புகழ் ஆகியவற்றில் 15 நாட்கள் தொடர் சொற்பொழிவு செய்திருக்கிறார். தன் 15ஆவது வயதில் சிவ தீக்ஷை பெற்ற இவர், 1969 முதல் சபரி மலை யாத்திரையும், பழனிக்கு காரைக்குடியில் இருந்து தைப் பூசத்திற்கு பாத யாத்திரையும் சென்று வருகிறார்.
இவர் பெற்ற பட்டங்களும் ஆண்டும், வழங்கியோரும்:
1) 1972 - சொல்லோவியர் - பாவலர் மன்றம், திருப்பனந்தாள்.
2) 1978 - திருமந்திரச் சொல்மணி - பன்னிரு திருமுறை மன்றம், மதுரை
3) 1981 - விரிவுரை வித்தகர் - விட்டவாசல் முனீஸ்வரர் கோவில், மதுரை.
4) 1999 - திருப்புகழ் உரைமணி - மதுரைத் திருப்புகழ் சபை
5)2001 - செந்தமிழ்ப் பேரொளி - கஞ்சி மகாஸ்வாமி ட்ரஸ்ட், திருப்பரங்குன்றம்
6) 2005 - நற்றமிழ் நாவலர் - திருவள்ளுவர் கழகம், மதுரை.
இவர் தமிழில், காஞ்சிப் பெரியவர் திருநீறு விடு தூது, பண்டிதமணி பிள்ளைத் தமிழ், ஆண்டவனும் ஆண்டவரும், உலகப் புகழ் பெரும் கோவிலூர்த் திருமடம், காசிப்பதியும் கங்கை நதியும், கட்டிகுளம் மாயாண்டி சுவாமிகள் வரலாறு, திருவாசகம் மூலமும் உரையும் எந்தையும் தாயும் என்ற நூல்களும், ஆங்கிலத்தில், Secretarial Practice, Business Organisation, Insurnce, Entrepreneurship Development & Business Environment ஆகிய நூல்களை எழுதி உள்ளார். திருவாசக மூலம் மற்றும் உரையை குறுந்தகட்டிலும் வெளியிட்டுள்ளார்.
சிங்கப்பூர், இலங்கை, மலேசியா , நேபாளம், திபெத், ஜெர்மனி, பிரான்ஸ், ஆஸ்திரியா மற்றும் வியட்நாம் போன்ற வெளிநாடுகளுக்கு சென்றுள்ள இவர் திருக் கயிலாய யாத்திரையும் மேற்கொண்டுள்ளார். தமிழுக்காக பணி புரிந்த இவர், வணிகவியல் பேராசிரியராக சென்னை லயோலாக் கல்லூரியில் 1964 முதல் 1965 வரையிலும், பழனி - பழனியாண்டவர் கலைக்கல்லூரியில் 1966-67 ஆம் ஆண்டுகளிலும், 1967 முதல் 2008 வரையில் நாம் பயின்ற சௌரஷ்ட்ராக் கல்லூரியிலும் பணியாற்றி உள்ளார்.
கம்பன் அடிப்பொடி சா கணேசன் 10.4.1968 அன்று இவரை வாழ்த்தி எழுதிய மரபுக் கவிதை இதோ உங்கள் பார்வைக்கு:
நல்ல கவிவலவன்; நம்பனுறை செம் மனத்தனன்;
வெல்லத் தமிழ்சுவைநா வீறாளன் - சொல்லரிய
மெய்யுணர்வு நன்குடைய மீனாட்சி சுந்தரன்
தெய்வ அருள் பெற்றுயர்க தேர்ந்து.