Wednesday, 19 September 2012

விநாயகர் பெருமை


கணபதி, கஜானன், ஆனைமுகத்தான் என்றெல்லாம் நம்மால் துதிக்கப்படும் பிள்ளையார் இன்று விநாயக சதுர்த்தி நன்னாளில் நாடெங்கிலும் வணங்கப்படுகிறார்.  குறிப்பாக மகாராஷ்ட்ரத்தில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.  அவரவர்  வீட்டில் நன்றாகக்   கொண்டாடப்பட்டு வந்த விநாயக சதுர்த்தி  விழாவினை மரியாதைக்குரிய திலகர் பெருமான் ஆங்கிலேயருக்கு  எதிராக பாரத மக்களை, குறிப்பாக ஹிந்துக்களை திரட்டுவதற்காக இத் திருவிழாவினை  சமூகத் திருவிழாவாக 1900 களில் நடைமுறைப்படுத்தினார்.   

பிடித்து வைத்தால் பிள்ளையார் என்பதாக மிகவும் எளிமையான இறை. வயல்காடுகளில் பணி துவங்குகையில், அங்கே இருக்கும் சாணத்தைக் கொண்டு கூட பிள்ளையார் என பிடித்து வைத்து பூசிப்பதுண்டு. அதனில் சொருகப்படும் அருகம்புல்லினால், அச் சாணி கெடாது இருக்கும். அனைவர் வீட்டிலும் பிற தெய்வங்களுக்கு பூஜை செய்யும் சமயத்தில் மஞ்சளில் பிள்ளையார் செய்து அவர் அனுமதி பெற்றே முக்கிய பூஜை  துவங்கும்.  எத்தகைய எளிய ஓவியத்திலும் சிறப்பாய் விளங்கிடும் தெய்வம், கம்ப்யூட்டர் யுகத்தில் வித விதமாய் ஓவியங்கள் வருகின்றன. விநாயகர் கம்ப்யூட்டர் இயக்குவது போன்றெல்லாம், அதே போல் வித விதமாய் சிலைகளும்.


தமிழகத்தில், வாதாபி மீது படை எடுத்து வந்த பரஞ்சோதி என்பார் தமிழகத்தில் விநாயக வழிபாடு கொணர்ந்தார் எனவும்,  அதன் காரனமைத்தன் வாதாபி கணபதிம் பஜேஹம் என்ற பாடல் உள்ளதாக ஒரு வாதம் உண்டு. ஆனால் அதற்கும்  முன்னதாகவே தமிழகத்தில் வழிபாடு   நடந்துள்ளது என்பதற்கு பிள்ளையார்பட்டி விநாயகர் சாக்ஷி, சுமார் 2  அல்லது 3   ஆம் நூற்றாண்டில் செதுக்கப்பட்ட சிலை என்பது,  (அதன் கீழ் சிற்பியின் கையெழுத்துப் பொறிக்கப்பட்டுள்ளது  என்பதும்  அங்கே இரு கையுடன், ஜடாமுடியுடனும் சிவ லிங்கத்தை வழிபடுகிறார்  என்பதும்  சுவாரசியமான தகவல்கள்) .  ஆனால் வேத காலத்தில் விநாயக வழிபாடு இல்லை, என்பது வியக்க வைக்கும் தகவல். ஆதி சங்கரரின் பஞ்சாயதன வழிபாட்டில், இடம் பெறும் சோனபத்ரம்    அவருக்குரியது. 
                                                       
விநாயகரின் தலை யானை, உடல் மனிதன் (உடல் பூத வகை  என்று சொன்னால்  பஞ்ச பூதங்களால் ஆன எனப் பொருள் கொள்ள வேண்டும்)
அவர் வாஹனம் மூஞ்சூறு எனப்படும் எலி வகை. பாலூட்டி வகையில் நிலத்தில் வாசிப்பதில் பெரியது யானை, சற்று நடுத்தரமான உருவம் மனிதன் மற்றும் சிறிய உருவம் எலி. எனவே  விநாயகரின் வடிவு தாய்மையின் வடிவம் என்பதாலே, தாய்க்கு முதலிடம் கொடுக்கும் ஹிந்துக்கள், கணேசருக்கும் முதலிடம் கொடுத்துள்ளார்கள்.

       பெரும்பாலான நூல்களில் அவர் வழிபாட்டு செய்யுள் இடம் பெறும். அவருக்கென விநாயகர் அகவல் ஒளவையாரால் தனியாகப் பாடப்பட்டுள்ளது. அது  முழுவதும் யோக சாஸ்திரத்தை குறிப்பதாக உள்ளது. அவருக்கு தமிழகத்தில் சிறப்பாக பிள்ளையார்பட்டி, திருச்சி, கோவை, புதுவை ஆகிய ஊர்களில் தனிக் கோயில்கள் உள்ளன. மதுரையில் இருக்கும் முக்குறுணி (1  குறுணி என்பது 6 படி) விநாயகருக்கு 18  படி அரிசி கொண்டு கொழுக்கட்டை படைப்பர், அது ஒரு வாரம் முன்னரே அடுப்பில் ஏற்றப்படும். நம்மில் நிறைந்திருக்கும் ஞானத்தை, மாயை மறைத்து இருக்கிறது என்பதன் குறியீடே கொழுக்கட்டை. (பூரணம் ஞானம், மாவு மாயை.)  18  என்ற எண்ணின் சிறப்பிற்கு கீதையின் அத்தியாயம் ஒன்றே தற்பொழுது போதுமானது. 


 

No comments: