எங்கள் கல்லூரிக்காலங்களில் பெரும்பாலும் நாங்கள் ஆசிரிய பெருந்தகைகளை அவ்வளவாக பகைத்துக்கொள்ளவில்லை. அதிகமாக கலாட்டா, கலவரம் இல்லாமல் அமைதி பூங்காவாகவே கடைசி வரையிருந்தது. எங்கள் வகுப்பில் மாணவிகள் மெஜாரிட்டியாகயிருந்த காரணத்தால் பேராசிரியர்களெல்லாம் நிம்மதியாகவே வகுப்பெடுத்து சென்றனர். என்னதான் சிரிப்பு பொங்கி கொண்டு வந்தாலும் வகுப்பு முடிந்து ஆசிரியர் சென்றபின்னர் தான் விழுந்து விழுந்து சிரிப்போம். ஆகவே பெரும்பாலான பேராசிரியர்களின் வகுப்பு நேரங்களெல்லாம் சர்வ நிசப்தமாகவேயிருக்கும்.
நாகராஜன், மகாதேவன், நான் மூவரும் படிப்ஸ் மாணவர்கள் போல்.......!!!!!!!! உட்கார்ந்திருப்போம். நாகு சூப்பராய் கிண்டல் பண்ணுவான் ஆனா டக்குனு சிரிக்கமாட்டான். மகாதேவன் கண்ணாடியை தூக்கிவிட்டுக் கொண்டு தேமெனுயிருப்பான் மாட்டுவது நானாக தானிருக்கும். அடக்கமுடியாதயளவிற்கு ஜோக்கடிப்பான். தமிழில் நல்ல புலமை அவனுக்கு. கையெழுத்து கண்ணில் ஒற்றிக்கொள்ளலாம் போலிருக்கும். முத்து முத்தாய் எழுதுவான். கவிதை நன்றாய் எழுதுவான். அமைதியான ஆரவாரமில்லாத ஆழ்கடல் மனிதனவன். எனக்கு ரொம்ப ரொம்ப பிடித்த நண்பனவன். அவனிடம் நாள்பூரா பேசிக்கொண்டேயிருக்கலாம் அலுப்பே தட்டாது. அந்தளவிற்கு ஆன்மீகம், இசை, இலக்கியம், சமூக கண்ணோட்டம் போன்றவற்றில் மிகுந்த ஈடுபாடு கொண்டவன். உருவத்தில் சிறுத்திருந்தாலும் ‘உருப்பெரும் தேருக்கு அச்சாணி அன்னார் உடைத்து’ என்பது போல் எங்கள் நட்பு தேருக்கு அச்சாணியாகயிருந்தான்.
ஒருசமயம் பேராசிரியர் ஒருவர் பாடம் நடத்திக்கொண்டிருக்கிறார். காலை நேரம்... சுகமாய் காற்று வீசுகிறது....!. குன்றின் மேல் கல்லூரியிருந்ததால் காற்றிற்கு எப்போதும் பஞ்சமேயிருக்காது. மாணவமணிகள் அனைவரும் சத்தமேயில்லாமல் பாடத்தை கவனித்துக்கொண்டிருந்தார்கள். பக்கத்து வகுப்புகளிலிருந்தும் எந்தவித சத்தமும் வரவில்லை. ஆசிரியரின் குரல் தவிர வேறெந்த சத்தமுமில்லை. எங்கள் வகுப்பிலிருந்து பார்த்தால் தூரத்தில் திருப்பரங்குன்றம் மலைதெரியும். அவ்வப்பொழுது அந்த அழகை ரசிப்போம். அன்று நான் அந்தமலையின் அழகை ரசித்தேன்..!, காற்றை ரசித்தேன்....! அமைதியை ரசித்தேன்....! ஆனந்தலஹரியில் திளைத்துக்கொண்டிருக்கும் போது....... ஏற்றத்தில் ஏறும் போது சைக்கிள் செயின் அறுந்துபோவது போல் வந்ததப்பா..... ஒரு மலைக்குளவி.
அம்மாடி....... என் ரசனையெல்லாம் ரயிலேறி போய்விட்டது. திகில் தோளில் ஏறி உட்கார்ந்துகொண்டது. நல்ல சிவந்த நிறத்தில் கொடிய கொடுக்குகளுடன் கருப்பு இறக்கைகளுடன் அது வகுப்புக்குள் நுழைந்து அங்குமிங்கும் பறக்கத்துவங்கியதும் எனக்கு அல்லு கிளம்ப ஆரம்பித்துவிட்டது. கற்பனை சந்தோஷத்தை விட கற்பனை பயம் ரொம்ப கொடுமையானது. அந்த குளவியிடம் கொட்டு வாங்கினால் எப்படியிருக்கும் என்ற எண்ணமே திகிலை கிள்ப்பியது. இதில் ஒரு கொடுமை என்னவென்றால் பெரும்பாலான மாணவ மாணவியர் வந்த குளவியை கவனிக்கவேயில்லை. நான் முதல் பெஞ்சில் இருந்ததால் இருப்பு கொள்ளவில்லை. குளவி பறக்கும் திசையெல்லாம் என் கண்களும் கூடவே சென்றது. சரி நமது தோழன் நாகு என்ன பண்ணுறான் என்று பார்த்தால்............ பாவிப் பய! கொஞ்சம் கூட அலட்டிக்காமல் அலட்சியமாக அந்த குளவியை பார்த்தான். டேய்! நாகு குளவிடா....... என்னடா பண்றது சாதா குளவியில்லை மலை குளவி கொட்டினால் கும்பாவை கவிழ்த்தது போல் வீங்கி விடும் வலி கொன்றுவிடும் கொன்று! என்னடா பண்ணலாம்........என்று ‘அஞ்சுவது அஞ்சி அறிவார் தொழில்’ செய்தேன்.
விருட் ..........விருட்..........டென்று குளவி பறந்து பறந்து கிலியை ஏற்படுத்தினாலும் நாகு தி கிரேட்........ சீ! இதெல்லாம் ஒரு மேட்டரா என்பதுபோல்அந்த குளவியை கூர்ந்து கவனித்தான். தீடிரென்று அந்தகுளவி நாகுவின் பக்கம் விர்ரென்று இறங்கி பறக்க ஆரம்பித்தது. வாவ்.......வாவ்........ அந்த கண்கொள்ளாத காட்சியை இப்போது நினைத்தாலும் மேனி சிலீர்க்கிறது. பார்சிலோனாவில் ஒலிம்பிக் நடக்கும் போது ஒலிம்பிக் ஜோதியை கீழிருந்து வில்லின் மூலம் குறி பார்த்து எறிந்து ஏற்றி மெய் சிலீர்க்க வைத்தாரே ....! அதே போல் நாகு அவனை நோக்கி கொலைவெறியுடன் வந்த குளவியை பதட்டமோ படபடப்போ அடையாமல் நிதானமாக பார்த்து கையிலிருந்த ரீபில் பேனாவை எடுத்து குறிபார்த்து அதன் தலையில் நச்சென்று ஒரு போடு போட்டான். வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ..... அவ்வளவுதான்..... மலைகுளவி மல்லாந்து மண்ணைக்கவ்வியது. அடி தாங்காமல் சுருண்டு கீழே விழுந்துவிட்டது. அப்பவும் அவன் முகத்தில் எந்தவித வெற்றிக்களிப்புமில்லை. அந்த சம்பவத்தை ரொம்ப சாதரணமாக எடுத்துக்கொண்டு மறுபடியும் பாடத்தை கவனிக்க ஆரம்பித்துவிட்டான்.
அவனிடமிருக்கும் அற்புதமான குணம் அலட்டலில்லாமல் இருப்பது. எங்கும் எப்போதும் எதுலையும் அலட்டல் பதட்டமில்லாமல் அணுகுவான். அவன் சந்தோஷத்தில் குதித்தும் பார்த்ததில்லை...! சங்கடத்தில் சாய்ந்தும் பார்த்ததில்லை....! மொத்தத்தில் அலாதியான மன வைராக்கியம் படைத்தவன்.“உருக்குறு நறுநெய் பால்விதிர்ந்தன்ன அரிக்குரல் மிடற்ற” என்ற சங்ககாலப்பாடலில் குறிப்பிட்டது போல் கம்பீரமான கரகரப்பு குரலுக்கு சொந்தக்காரன், அகத்தியர் வடிவத்தான், சிரிக்கும் போது வீரப்பா ஞாபகத்திற்கு வருவார், மறக்கமுடியாத தமிழ் சொற்றொடருகளின் அதிபதி, சீனிவாசனின் சீண்டல்களில் கூட சிதைந்து போகாதவன், மாணவிகள் மத்தியில் பெருமதிப்போடு வாழ்ந்தவன், என்னை எந்தசமயமும் ஆச்சரியத்திலியே சஞ்சரிக்க வைத்தவன்.... நண்பன்டா .... என்று சொல்லும் போதே அவன் ஞாபகம் தான் வரும். எனது பள்ளிப்பருவத்திலிருந்து கல்லூரி வரை எல்லா நண்பர்களும் என்னைத்தான் தாங்குவார்கள். ஆனால் நான் என்றென்றும் தாங்கிய ஒரே நண்பன் நாகராஜன் மட்டுமே....! ஆனால் அவன் என்னை ஒரு பொருட்டாவே எடுத்துக்கொள்ள மாட்டான். சட்டையே பண்ணமாட்டான். வந்தா வா........! இல்லாட்டி போய்கிட்டேயிரு...... என்ற ரகத்தில் தான் என்னை வைத்திருந்தான். அது தெரிந்தும் நான் அவனோடு ஏன் இவ்வளவு ஈடுபாடோடு இருந்தேன் என்றால்..? அவனுடைய தன்மையான குணம், நடவடிக்கை, அணுகுமுறை. வள்ளுவப் பெருந்தகை சொன்னது போல்.... நல்லவர் நட்பை கொடுத்தும் கொளல் வேண்டும் அல்லவா ..? நானும் என் ஈகோவை விட்டு கொடுத்து அவனிடம் அந்நியோந்நியமாக பழகினேன்.
அவனுடன் பழகிய நாட்கள், சென்ற இடங்கள் அத்தனையும் இப்ப நினைத்தாலும் சந்தோஷமாகயிருக்கும். அவனிடமுள்ள இன்னுமொரு முக்கியமான சிறப்பு நம்மைப்பற்றிய கிண்டலை நம்மிடமே மனம் நோகாதயளவிற்கு சொல்லி.... நம்மையே சிரிக்கவைத்துவிடுவான். வேகமாய் பேசுவது என் வழக்கம் அதை வைத்தே பலமுறை கலக்கியிருக்கிறான். இப்படித்தான் ஒருதடவை கல்லூரி முடிந்து பஸ்ஸில் போய்கொண்டிருக்கும் போது ... டேய் நாகு! பஸ் ஸ்டாண்ட் போனதும் கரும்பு ஜூறு சாப்பிடலாமா...? என்று கேட்டதும் அவன் வீரப்பா ஸ்டைலில் கப ...கப ...வென ..... சிரித்தானே... ஒரு சிரிப்பு. எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இவன் இப்படி சிரிக்கிறான்? நாம என்ன தப்ப சொல்லிவிட்டோமுனு.... குழம்பினேன் .. மற்றவர்களுக்கும் புரியவில்லை. அப்பறம் அவன் சொன்னான் ..... மாப்பிள்ள .. நம்ம பாய் தமிழையும் ஆங்கிலத்தையும் சேர்த்து அட்டகாசமாய் சொல்றான் பார். ஒன்னு தமிழில் ‘கரும்பு சாறுனு’ சொல்லனும்... இல்லாட்டி பாதி ஆங்கிலத்தில் ‘கரும்பு ஜுஸ்னு’ சொல்லனும்..... அப்படியில்லாமல் இவன் இரண்டையும் கலந்து“கரும்பு ஜூறுனு”சொல்றான் பாருனு... திரும்பவும் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். விஷயம் புரிந்ததும் நானும் மற்றவர்களும் வயிறுவலிக்க சிரித்தோம் ரொம்ப நாளைக்கு என்னை பார்க்கும் போதெல்லாம்‘கரும்பு ஜூறு’ சாப்பிடலாமானு சொல்லி சொல்லி சிரிப்புமூட்டுவான். நாம் பேசும் வார்த்தைகளை உன்னிப்பாக கவனித்து பதில் சொல்லுவான். பதிலடி கொடுப்பதில் மன்னன்.
சீனிவாசனை கணக்கற்றமுறை பதிலடியில் சாய்த்திருக்கிறான். நண்பர்கள் நாங்களெல்லாம் அடிக்கடி சீனிவாசன் வீட்டிற்கு போவோம். சீனி அவங்க வீட்டில் செல்லப்பிள்ளை. இரண்டு அண்ணண்கள் இவன் தான் கடைசி அப்பறம் செல்லத்திற்கு கேட்கவா வேணும் ..? சீனியின் தாயார் அவனை சீராட்டி பாராட்டி வளர்த்தார்கள். அடிக்கடி சீனி எங்களிடம்‘காலையில் கஞ்சி மட்டும் குடித்துவிட்டு வரும் .... ஏழை பிராமணண்டா.’என்று சொல்வது வழக்கம். நாகு ஒருநாள் அந்த கஞ்சி ரகசியத்தை கண்டுப்பிடித்துவிட்டான். சீனி நாங்கள் நினைத்தது போல் பழையசாத கஞ்சி சாப்பிடவில்லை. அவனின் அருமை தாயார் தன் மகனின் தேக ஆரோக்கியத்திற்காக‘பாதாம்பருப்பு, பிஸ்தா, முந்திரி, கிஸ்மிஸ் போட்ட பாயாச கஞ்சி கொடுத்திருக்கிறார்கள். அந்த குசும்பன் நல்ல கும்முனு சாப்பிட்டுவிட்டு.... எங்களிடம் கதையளந்திருக்கான். நாகராஜனிடம் மாட்டிய பிறகு சீனிக்கு விமோசனமேது?
‘தம்பி நீ சாப்பிடும் கஞ்சியை நாங்கள் சாப்பிட்டால்.... நாலு நாளைக்கு பசிக்காது. நீ என்னடாவென்றால் காலையில் அதையும் குடித்துவிட்டு மதியம், இரவும் சாப்பிடுகிறாய் ... நல்ல ஏழை பிராமணண்டா.... நீ என்று சீனியை ஒரு வழிபண்ணிவிட்டான்.
மகாதேவனை பொறுத்தமட்டில் நாகுவின் மகுடிக்கு கட்டுப்பட்ட தண்ணீர் பாம்பு. ராமகிருஷ்ணன் வாயில்லா பூச்சி, கிருஷ்ணமூர்த்தி எப்பவும் வெளியிலிருந்து ஆதரவு, சீனி அடிபட்ட சிங்கம், நான் தீவீர ரசிகன், பாலா, விஜி, சாந்தி, சித்ரா, ஞானி அத்தனை பேருக்கும் அன்பான தோழன். மொத்தத்தில் எங்கள் நட்பு குழாத்தில் நாகு முடிசூடா மன்னனாகவே இருந்து வந்திருக்கிறான்.
இன்னும் உலா வரும்........
3 comments:
மனம் வாக்கு காயம் மூன்றும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பார் ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர். ஆனால் நம் தோழர் நாகராஜன் இம்மூன்று விஷயத்திலும் மாறுபட்டு இருந்தாலும் வெற்றிப் பெற்றார். அவன் உருவில் குறட்பா (குள்ளம்), பேச்சில் ஏழு சீர் கழி நெடிலடி ஆசிரியப்பா (அவ்வளவு சீக்கிரம் முற்றுப் பெறாது), உள்ளத்தில் "வெண்"பா (வெண்பாவை போன்று எளிய தன்மை). அன்வர் நாகுவுடன் கொண்ட நட்பு கடற்கரை ஓரத்து நட்பு அலைகளின் ஆரவாரம் அதிகம் இருக்கும், வண்ண வண்ண பலூன்களும், சிறு பிள்ளைகளின் விளையாட்டும், காதலரின் கொஞ்சு மொழியும் இருக்கும். எங்கள் நட்பு நடுக்கடல் நட்பு. அங்கே அலை இல்லை. ஆனால் ஆழ் கடலில் இருந்து பல முத்துக்களை கண்டு கொண்டோம். சுராவென என் கடுமைப் பேச்சும் இருக்கும் (அன்பால்தான்).
சாதாரணமாக யாராவது சற்று புகழ்ந்தால் சிலர் பெருமையாக நினைப்பர், சிலர் நெளிவர், பெரும்பாலும் சிலர் இன்னும் புகழ மாட்டார்களா என்று நினைப்பர். இதில் நாகு எந்த வகை என்று கூறுவது சற்று கடினம். திருவிளையாடலில் வருவது போல் அவர் எந்த வகையைச்சார்ந்தவர் என்று அவருக்குத்தான் தெரியும்.
Anyways, Hats off to Nagu!! Atleast he must feel proud of his friends’ fond gestures.
அப்பப்பா!! எத்தனை "பா"!
இத்தனை பெருமைகளை உடைய உங்களது நட்பு,
ஆழ்கடல் நட்"பா"
கடலோர நட்"பா"
என்பதல்ல முக்கியம் இங்கு.
அல்லது
கடை நிலை நட்பா
இடை நிலை நட்பா
முதல் நிலை நட்பா
என்பதும் அவசியம் அல்ல.
உண்மையான நட்பு இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அதன் பண்பு வெளிப்படும்போது அது பண் "பா"டுகிறது.
எது எப்படியோ,
4 பக்க கட்டுரையில் அன்வர் கொடுத்தது புதுப்பா என்றால்
அதற்கு கிருஷ்ணா தெரிவித்த கருத்து துளிப்பா!!
இப்படி வாரித் தந்திடுக ஒரு பா, ஏனென்றால்
அதைப் படித்தால் இருக்கிறது களிப்பா!!!
Post a Comment