Tuesday, 18 September 2012

பேராசிரியர்களும் நானும் - 5

          நாங்கள் கல்லூரியில் படிக்க சேர்ந்த பொழுது எங்களுடன் கல்லூரியில் படிப்பிக்க சேர்ந்தவர்கள், திருவாளர்கள் மோகன் சாரும், பாலகிருஷ்ணன் சாரும்.  இருபாலர் வகுப்பை அமைந்ததைப் போலவே பணியிலும் இருபாலர் வேண்டும் என நிர்வாகம் நினைத்ததோ என்னவோ, சாந்தா மேடம் அவர்களை பணி  நியமனம் செய்தது.
வகுப்பில் அவர்கள் வந்த முதல் வகுப்பு  -  நான்  NCC யில்  சேரப்  பெயர்  முன்னதாகவே கொடுத்து இருந்தேன். எனவே அதன் தொடர்பாக தொடர்புகொள்ளக் கூறி ஒரு குறிப்பு வந்தது. அதற்காக  அவரின் சம்மதம் பெற்றே வெளியில் சென்றேன்.  பின்னர் திரும்பி வருகையில் வாசலில் நின்று ஒரு கனைப்பு கனைத்து   விட்டு உள்ளே வந்து விட்டேன். அவருக்கு நான் மாணவனா, அல்லது கல்லூரியில் பணி புரிபவனா என்ற குழப்பமா அல்லது உள்ளே வரலாமா என்று அனுமதி  கேட்காமலேயே  உள்ளே வருகிறானே என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. நான் excuse me என்று கேட்கவில்லை, ஏனெனில் NCCயில்  don't ask excuses என்று வேறு பொருளில் சொல்லி உள்ளதை இதற்கும் வைத்துக் கொண்டேன். அப்படி நான் உள்ளே வருகையில் வகுப்பில் அனைவரும்  கொல்லென  சிரித்ததும்  அவருக்கு ஒரு மாதிரியாகி விட்டது. முதல்  அனுபவமே அவருக்கு கசப்பாய்  அமைய வைத்தேன். 
     
       அன்வர் சொன்னது போல் அவரது  தடதடக்கும்  ஆங்கிலம் மூன்று  வருடத்திற்கும் புரியவில்லை. என்னமோ ஒரு மாதிரியாக ஓட்டினேன். நான் நாகு, அன்வர் போன்றோரோடு நட்பாய் இல்லை  என்று அன்வர் தன் பதிவில் எழுதி இருந்தான்.  ஆனாலும் அந்த குழுவினரோடு போய் வந்து கொண்டு இருந்தேன் என்பதுதான் உண்மை. நாம் கல்லூரியில் படிக்கும் பொழுது "மை டியர் குட்டிச்சாத்தான்" பப்டம் வந்து இருந்தது. அதற்கு என் அம்மாவை அழைத்து சென்றேன். அங்கே மேடமும் அவரின் தாயோடு வந்து இருந்தார். அவர் தாயார், எங்கள் பக்கத்து வீட்டுக் காரருக்கு உறவினர்.  என் அம்மாவிடம் இருவரையும் அறிமுகம் செய்து வைத்தேன். என் பக்கமே திரும்பாமல் சற்று வெறுப்பாகவே இருந்தார், ஏனடா இங்கே இவனிடம் மாட்டிக் கொண்டோம் என்பது போல். என் அம்மா  அவரிடம்  விசாரித்தார்களாம் பையன் எப்படி நல்ல மாதிரியாக இருக்கிறானா என்று. அதற்கு மேடத்தின் பதில் என்ன தெரியுமா? உங்கள் பையன் நல்ல மாதிரிதான் ஆனால் சேர்க்கைதான் சரி இல்லை. அவன்  நண்பர்கள் சரி இல்லை,  அவர்களை விட்டு விலகினால் அவன் நல்லா வருவான் என்று.  நண்பர்களே உங்களுடன் அதிகம் சேராத பொழுதே   எவ்வளவு நல்ல certificate கொடுத்து இருக்கிறார்கள் பாருங்கள். பின்னர் அவர் எங்கள் அனைவருக்கும்  நல்ல ஒரு தோழியாக,  சகோதரியாக   மாறினார்கள் என்பது  சரித்திரம்.

          வகுப்பில் 5  மதிப்பெண்ணிற்கு test நடக்கும் அல்லவா? அதில் ஒருமுறை சுத்தமாகவே படிக்கவில்லை. எனவே அவரிடம் சொல்லிவிட்டேன், நான் படிக்கவில்லை எழுதப் போவது இல்லை நான் தொந்தரவு செய்வேன் வெளியே சென்று விடுகிறேன் என்று. அவர் ஒத்துக் கொள்ளவில்லை. வகுப்பில் இருந்து தேர்வு எழுதித்தான் ஆகவேண்டும்  என்று சொல்ல அமைதியாக என் பெயர் வரிசை எண் எழுதிவிட்டு வெள்ளைப் பேப்பரைக் கொடுத்து வந்தேன். என்னை அவர் அறைக்கு அழைத்து என்ன ஒன்றுமே எழுதவில்லை என்று கேட்டார்கள், அதுதான் சொன்னேனே ஒன்றும் தெரியாது என்று, அதற்காக இப்படியா  என்று சொல்லிவிட்டு அன்று வகுப்பில் எந்த தொந்தரவும் செய்யவில்லை என்பதற்காக எனக்கு 3  மதிப்பெண் போட்டார்கள். அவர் எடுத்த Indian Constitution பாடத்தின் பொழுது மட்டும் அவரோடு விவாதமெல்லாம் செய்து இருக்கிறேன். அப்பொழுது அந்த விஷயத்தில் ஆர்வமாய் இருந்ததால் அது பற்றி அப்பொழுது தெரிந்து வைத்து இருந்தேன். அதில் சிலநேரம் தவறும் இருக்கும் சில நேரம் என் கருத்து சரியாகவும்  இருக்கும். 

           இது வகுப்பா இல்லை லவ்வர்ஸ் பார்க்கா என்று ஏதோ சொல்லிவிட்டார்கள் என்பதற்காக  Mass cut செய்து மறு நாள் சொ சொ மீ அவர்களிடம் நாமெல்லாம் வாங்கிக் கட்டிக் கொண்டது நன்றாய் நினைவிருக்கிறது. அதன் பின்னர் நம் எல்லோருடனும் ஓரளவு நட்பை பழக ஆரம்பித்தார்கள்.  அன்வர் சொன்ன nominee கதையில் மேடம் எல்லாம் பிஞ்சுலேயே பழுத்ததுகள் என்று சொல்ல, இறுதி வாக்கியமாக மகாதேவன் சொன்ன "பிஞ்சிலே பழுத்தாலும் துவர்ப்பதில்லை" என்று கவிதை போல சொல்லி மூக்குக் கண்ணாடியை தூக்கி விட வகுப்பை விட்டு அவனைத் துரத்தியது என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி. அப்பொழுது  அன்வர்  கண்ணில் கண்ணீர் வர சிரித்ததை என்னால் மறக்க முடியாது.

            சாந்தா  மேடம் அவர்களின்  திருமணத்திற்கு நாங்கள் நண்பர்கள் எல்லாம் சென்று இருந்தோம். அங்கு  வானொலி அண்ணா எனப்படும் திரு கூத்தபிரான் அவர்களோடு நாங்கள் பேசிக் கொண்டு இருந்ததை மறக்க முடியாது. திருமதி சாந்தா மேடம் எனது திருமண வரவேற்புக்கும் வந்து ஆசி வழங்கியதையும், அவரின் தாயார் என் திருமணத்தில் கலந்து கொண்டதையும் மறக்க முடியாது.  அது அவர்கள் காட்டிய அன்பைக் காட்டுகிறது. இன்றும் நம் வகுப்பு மாணவர்கள் அனைவரையும் நினைவில் வைத்து இருப்பது ஆகட்டும், எப்பொழுது பேசினாலும் நேரம் கொடுத்து கேட்பார்.  அன்று நம் ஆசிரியை, இன்றோ நம் அனைவருக்கும் ஒரு தோழியான சகோதரி.  

2 comments:

Anvar Husain said...

கிருஷ்ண உனது தொடர் இந்த முறை மிக நன்றாக வ்ந்துள்ளது. உனது ராஜகம்பீர தோற்றம் மேடத்தை அப்பவே மிரள வைத்ததென்னவோ உண்மை தான். ! அதேபோல் என்னை, நாகுவை, தேவனை எங்களது விடாத சிரிப்பு சார்ந்த அணுகுமுறைக்காக கடுமையாக அவர்கள் வெறுத்ததும் உண்மைதான்

சிறியவன் said...

இதற்கு முந்தைய பதிவுகள் நன்றாக இல்லை என்பதனை அழகாய் உணர்த்திய அன்வருக்கு நன்றி. பாராட்டியமைக்கும் நன்றி.