Wednesday, 6 June 2012

சந்திப்பின் முனைப்பில் நவரசம்

       சௌராஷ்டிரா கல்லூரியில் B.A Corporate Secretaryship பயின்ற நண்பர்களின் வெள்ளிவிழா சந்திப்பு கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதியன்று மதுரை
 சௌராஷ்டிரா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நான் உட்பட 24  முன்னாள்  மாணவ மாணவியர் தங்கள் குடும்ப உறுப்பினர்களுடன்  வந்திருந்து களித்தோம். இந்த நிகழ்வுகளிலும், இதற்கான  பணியிலும்  ஈடுபடும்போது  ஏற்பட்ட  உணர்ச்சி  நிலைகளை  நவரசம் என்ற பெயரில் பதிவிட விரும்பினேன். அதன் வெளிப்பாடே இந்த பதிவு.

 1. மகிழ்ச்சி    

              20  ஏப்ரல் அன்றுடன் 42  நண்பர்கள் வரை தொடர்பில் வந்திருந்தார்கள். அவர்களில் சுமார் 30  பேர் வரை வருவார்கள் என எதிர்பார்த்தேன், இருப்பினும் சிலர் தங்கள் குடும்ப, ஆரோக்ய மற்றும் தனிப்பட்ட பிரச்னை காரணமாக கடைசி நேரத்தில் வர இயலவில்லை.  இந்த 24 என்பது ஒன்றும் குறைவானது கிடையாது என்பது எனது கருத்து.  இந் நிகழ்ச்சியில் திரு ரமேஷ் அவர்கள் நன்றியுரை ஆற்றும்போது கூறிய விஷயமான முன்னாள் மாணவிகளோடு நாங்கள் பேசியது கூட கிடையாது, ஆனால் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறார்கள் என்றால் அதற்கு அவர்களின் கணவர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும் எனக் குறிப்பிட்டார். அது நூற்றுக்கு நூறு உண்மையே. அவர்களும், அவர்களின் குடும்பத்தாரும் காட்டிய ஆர்வம் மனதிற்கு மிக்க மகிழ்ச்சியை கொடுத்தது. 
      
             சில குழந்தைகள், இந்த முயற்சியினை எடுத்து உன்னை தொடர்பு கொண்ட அந்த கிருஷ்ணமூர்த்தி uncle யார்? அவரைப் பார்க்கவேண்டும் எனக் கூறியதாக சொல்லி, அவர்தம் பெற்றோர்கள்  எனக்கு அறிமுகம் செய்து வைத்தார்கள்.  இதுவே என் மனதிற்கு மிகவும் மகிழ்ச்சி அளித்த விஷயம். இது தற்பெருமையாக இருப்பது போல் தோன்றினாலும், இந்த மகிழ்ச்சியினை பகிராமல் இருப்பது எனக்கு நானே செய்து கொள்ளும் துரோகம் ஆகும் என்பதனால் இதனைத் தெரிவிக்க வேண்டியதாக உள்ளது.

           திரு சொ சொ மீ சுந்தரம் அவர்களை தொடர்பு கொண்டு பேசியபோது நிகழ்ச்சிக்கு வர  ஒப்புக்கொண்டார். அவருடைய busy schedule நடுவிலும் நமக்காக நேரம் ஒதுக்கியது மிக்க மகிழ்ச்சியைத் தந்தது. அவரைப் போன்றே திருவளர்கள்  GRB, TSB, மோகன் மற்றும் திருமதி ஷாந்தா ஆகியோரும், இடம் தந்து உதவிய கல்லூரி முதல்வர் திரு RL ராம்நாத் அவர்களின் எளிய தன்மை மகிழ்வைத் தந்தது.

 2. பெருமிதம்

           நண்பர்களின் அலைபேசி எண் கிடைத்தவுடன் பேசும் பொழுது கிருஷ்ணமூர்த்தி, மதுரை என்று சொன்னவுடனேயே 25 ஆண்டுகள் கடந்து இருந்தாலும் உடனே அடையாளம் கண்டு கொண்டதற்கு மகிழ்வும் பெருமிதமும் கொண்டேன்.

 3. வெட்கம் 

               நிகழ்ச்சியினை நடத்துவதற்காக சில நண்பர்களும் என்னுடன்  பாடுபட்டு இருந்தாலும், அதிகமான credit எனக்கே கொடுத்தது கொஞ்சம் என்னவோ போல்தான் இருந்தது. எனினும் வாழ்கையில் என்ன சாதித்தோம் என்று திரும்பிப் பார்க்கும்போது இந்த நிகழ்வு ஒரு மைல் கல்லாக இருக்கும்.  இந்த நிகழ்வு முடிவல்லத் துவக்கமே என்று கொண்டு இதன் மூலமோ அல்லது வேறு வகையிலோ இன்னும்  எதாவது சாதிக்க வேண்டும் என மனம் விரும்புகிறது.

             புகழ் என்னும் போதை மனதை மயக்கக் கூடியது என்ற உண்மையை உணர்ந்து, புகழுக்காக அல்லாமல் மனத் திருப்திக்காக செய்யத் துவங்கினால் அது இந்த புவியில் பிறந்ததற்கு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கும். தோன்றிற் புகழோடு தோன்றுக என்னும் வள்ளுவப் பெருந்தகையின் கூற்றினையும், கூற்றுவன் கொள்ளுமுன் செய்து இம்மைக்கும் மறுமைக்கும் வழி செய்து கொள்ள வேண்டும்.

4.  கோபம்

            இந்த நிகழ்சிக்காக 2008 ஆம் ஆண்டு முதல் அவ்வப்பொழுது ஏற்பட்ட பணித்  தொய்வுடன், எப்பொழுதேனும் நண்பர்களின் ஆர்வமின்மை காரணமாக, அவர்கள் என்னைத்  தொடர்பு கொள்ளாத போதும்,    ஏற்படும் மன உளைச்சல் ஆகியவை இருந்த போதிலும்  ஏப்ரல் 29 என முடிவு செய்த பின், மற்றும் நாங்கள் 5 பேர் கொண்ட நண்பர்கள் குழு வேடந்தாங்கல் சென்று வந்ததிலிருந்து மன உளைச்சல் ஏதும் இன்றி ஆர்வமாக பணி புரிய ஆரம்பித்தேன். 

இப்பணி செய்கையில் நண்பர்களின் ஒத்துழைப்பு எங்கேனும் குறைந்தால் சில நேரங்களில் மனம் கொந்தளிக்கும் சில நேரங்களில் போகிறது, நண்பன்தானே என்று இருக்கும்.  எங்கள் நண்பர் குழாத்தில் முக்கிய உறுப்பினராக விளங்கும் திரு  அன்வர் அவர்கள் பல முறை வீடு மாற்றி உள்ளார். ஆனால் ஒரு முறையும் என்னிடம் வீடு மாற்றத்தைக் குறித்துக் கூறியதில்லை. ஒவ்வொரு முறையும் மிகத் தாமதமாகவே தெரிய வரும். தற்பொழுது கடைசியாக ஒரு வீட்டினை மாற்றினார்.  அதனை எனக்குத் தெரிவிக்கவில்லை. இது விஷயம் திரு சீனி மற்றும் நாகராஜன் மூலமாகத் தெரிய வந்தவுடன், எனக்கு துர்வாச  மகரிஷிக்கு வருவது  போல வந்ததே பெரும் கோபம். வேறு யாரும் இந்த விஷயத்தை செய்து இருந்தாலும் கோபம் வந்திருக்கலாம் ஆனால் பெரும் கோபம் வந்தது அன்வர் மீது ஏன் எனில்,அவர் இந்த சந்திப்பு நிகழ்ச்சியில் அப்பொழுது பெரும் பங்காற்றவில்லை எனினும், பெரிதும் ஆர்வம்  காட்டினார் என்பதனால். அவரே இத்தவறினை செய்தால் வேறு யாரை என்ன சொல்ல முடியும்?

            பறந்தது sms அன்வருக்கு, நீ வீடு மாற்றிய விஷயத்தை எனக்குச் சொல்லவில்லை, இது நீ முதல் முறை செய்யவில்லை, நீ என் நண்பன் என்ற தகுதியினை இழந்து விட்டாய் என.  அங்கிருந்து 'என் சோகக் கதைய கேளு' என்றவாறு பதில் வந்தது. பின்னர் மனம் விட்டு பேசிய பிறகு நீ சொல்வது சப்பைக் காரணம், எனினும் மன்னிக்கப் பட்டது எனக் கூறி விஷயத்தை முடித்து விட்டேன்.

5. விரக்தி

               ஆனால் வேறு ஒரு நண்பர் அவர்களிடம் இந்த விஷயத்தில் இன்னும் கோபமாகவே இருக்கிறேன் என்பதனை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன்.  அவரை நான் அலைபேசியில் ஒரு முறை இரு முறை அல்ல, சுமார் 4 அல்லது 5 முறையேனும் அழைப்பேன். எத்தனை முறை அழைத்தாலும் missed call பார்த்து மீண்டும் அழைக்க மாட்டார்.  தொடர்ந்த அழைப்புக்குப் பின்னரே தொடர்புக்கு வருவர். இந்த முறையில் மீண்டும் மீண்டும் தொடர்பு கொண்ட பின், நிகழ்ச்சிக்கு வருவதாக கூறி இருந்தவர், வர இயலவில்லை என்ற விஷயத்தை அன்வரிடம் மட்டும் கூறி உள்ளார்.  சொன்னவர் என்னிடம் சொல்வதாக சொல்லிவிட்டு, தான் வராததை முதல் நாள் வரையிலும் என்னிடத்தில் கூறவில்லை.

               இதற்கு முன் என் அழைப்பிற்கு அவரிடம் இருந்து பதில் வரவில்லை என்பதற்கெல்லாம் நான் அவரிடம் கோபப் பட்டது இல்லை.  ஆனால் நிகழ்ச்சிக்காக  பல முறை அவரை அழைத்துப் பேசியுள்ளேன் என்ற பொழுது, நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் என்ற நிலைக்காக அவர் என்னிடம் தெரிவித்து இருக்க வேண்டும், அதனை செய்யத் தவறி விட்டார் என்பதனால் மிகவும் கோபம் அடைந்தேன். அவராகப் பின்னரேனும் தொடர்பு கொள்வர் என்றுப் பார்த்தால் தொடர்பு கொள்ளவில்லை. சரி மனதில் கோபத்தை வைத்துக் கொள்ள வேண்டாம், என நினைத்து அன்வரிடம் இதுக் குறித்து தெரிவித்து என்னைத் தொடர்பு கொள்ளச் சொல் என்று சொல்லி இருந்தேன். அன்வர் என் கோபத்தைத் தெரிவித்தும் அவர் என்னிடம் தொடர்பு கொள்ளவில்லை.

             பின்னர் ஒரு நாள் அன்வருடன் பேசுகையில் அவர் அருகில் இருப்பதாக தெரிய வந்தது. அப்பொழுது என் வருத்தத்தையும் கோபத்தையும் தெரிவித்துக் கொண்டு விட்டேன். கோபப் படுதல் என்பது தீய குணம் என்று கருதுபவன் நான்.  அது உண்மையே என்றாலும் கோபம் இல்லாத மனிதன் மதிக்கப் படுவதும் இல்லை என்பதும் உண்மையே. பயமுறுத்தும், வெறுப்பை ஏற்படுத்தும்   கோபம் தேவை இல்லைதான், நான் இன்னும் அந்த நண்பரிடம்  கோபம் கொண்டு இருப்பதற்குக் காரணம் நான் கோபப் பட்டாலும், மீண்டும் என்னை அழைத்துப் பேசவில்லை என்பதுதான்.  கோபத்தை மனதில் வைக்காமல் வெளிக்காட்டி விடுவதே எனக்கும் பிறருக்கும் நன்மை என்பதே என் கொள்கை. அவரின்  செயல்பாடு என்னை விரக்தி கொள்ளச் செய்தது.

6. வருத்தம்

               இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சில நண்பர்கள் தொடர்புக்கு வரவில்லையே என்பது வருத்தம் தந்தது. இதில் திருமதி ரமீலா  அவர்கள் நிகழ்ச்சி முடிந்தபின் தொடர்புக்கு வந்துள்ளார்கள். இவர் நண்பர் ஒருவரின் இல்லத்துக்கருகில் வசிக்கிறார். அவரும் தொடர்பில் இருக்கிறார். தொடர்பில் இருக்கும்  நண்பர் குறித்து தகவல் தெரிவிக்காத அவரின் செயல் வருத்தத்தை தந்தது.

      திருமதி லலிதா அவர்கள் சில காலம் முன்னர் மறைந்தார் என்ற செய்தியும் நம்மிடையே கல்லூரியில் படித்த தோழி உயிருடன் இல்லை என்ற நினைப்பே வருத்தம் அளிப்பதாக இருந்தது.       

7.  நெகிழ்ச்சி

நிகழ்ச்சியில் கலந்து கொள்வதாக இருந்த திருமதி பாலா அம்புஜம், உடல் நலக் குறைவு காரணமாக கலந்து கொள்ளவில்லை என்ற தகவலை அன்வரிடம் கூறி இருந்தார் (இவரும் என்னிடம் சொல்லவில்லை என்பதை குறிப்பிட்டாக வேண்டியுள்ளது). அதனைத் தெரிவிக்கையில் அவர் நண்பர்களை சந்திக்க இயலவில்லையே என்று அழுதார் என்று கேள்விப் பட்டதும் அவரின் நட்புனற்சிக்காக நெகிழ்ந்தேன்.

         திரு கிரி அவர்கள் Alumni meet என்பதை அதிகம் பொருட்படுத்தவே இல்லை என்பதே உண்மை. நிகழ்ச்சிக்கு சில நாட்கள் முன் தொடர்பில் வந்திருக்கும் நண்பர்களின் எண்ணிக்கை கேட்டு, மிகுந்த ஆர்வம் காட்டத் தொடங்கி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டார். நான் நிகழ்ச்சியில் குறிப்பிட்டது போல அவராகவே என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரிக்கும் அவரின் குணம் கண்டு நெகிழ்ந்ததுண்டு பல நேரங்களில்.

8. நகைச்சுவை

அன்வரிடம் கோபம் கொண்டேன் என்று சொன்னேன் அல்லவா அப்பொழுது இது விஷயமாக எவரும் ஆர்வம் காட்டவில்லை என்று நாகராஜனிடம் கோபமாகவும் விரக்தியாகவும் கூறும் பொழுது அவர் பொறுமையாய் கேட்டுக் கொண்டார், ஆனால் இது விஷயமாக நான் பேசிய பிறகு, என்னை நாகராஜன்  மதுரை வழக்கில் அண்ணே என்று அழைப்பதும் நான் என்ன தம்பி என அழைப்பதும் வழக்கமாகி விட்டது. அந்த அண்ணே வில் பாசம் இருக்காது, கிண்டல்தான் இருக்கும், தம்பியிலும் அதே கதைதான்.  நாங்கள் ஒருவருக்கொருவர் அழைப்பது நகைச்சுவை என்ற சுவையில் சேர்த்துக்கொள்ள வேண்டுகிறேன். (வேற கதை ஏதும் இல்லையே என்ன பண்றது?)

9. நன்றி

இந்த சந்திப்பினை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து நண்பர்களுக்கும், அழைப்பினை ஏற்று பங்கு பெற்ற பேராசிரியப் பெரு மக்களுக்கும், நண்பர்களின் குடும்பத்தார்க்கும் என் மனமார்ந்த நன்றி உணர்ச்சியினைத் தெரிவித்துக் கொள்ளக் கடமைப் பட்டுள்ளேன். இதற்கெல்லாம் மேலாக இந்த சந்திப்பினை வெற்றிகரமாக நிகழ்த்திட தன் தண்ணருளைதந்த இறைவன் திருவடியினைத் தொழுது நன்றியினைத் தெரிவிக்க
 கடமைப் பட்டுள்ளேன்.

No comments: