Monday, 1 April 2013

நானும் வானவில் அனுபவமும்

         கல்லூரியில் படிக்கும் காலத்தில் ஒழுங்காய் படித்த ஞாபகம் இல்லை.  ஏதாவது  புதுமை செய்ய வேண்டும் என்பதில் எண்ண  ஓட்டம் இருந்து கொண்டு இருக்கும். சோம்பேறித்தனம் எதையும் செய்ய விடாது.  எங்களுக்கு ராக்கிங் அனுபவம் இல்லை என்பதால் எங்கள் junior களுக்கும் அதே போன்ற அனுபவம் தந்திட அவர்களுக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடத்திட வேண்டும் எனத் தொடங்கினேன். அதைப்போன்ற எண்ணம் பிற நண்பர்களுக்கும் இருந்ததினால், அதன் முழு காரணம் நான் என்று சொல்ல இயலாது. இவ்விவரத்தை, திரு சொ  சொ  மீ அவர்களிடம் சென்று பேசியது நான் என்பது நினைவில் இருக்கிறது. என்னை மாணவர்களை வரவேற்றுப் பேச சொன்னார், நான் பொது வரவேற்புரை படித்து விடுகிறேன், மாணவர்கள் வரவேற்பினை பாலு செய்யட்டும் என்று சொல்லித் தப்பி விட்டேன் என்பதும் நினைவில் ஆடுகிறது. இது நடந்தது  இரண்டாம் ஆண்டின் துவக்கத்தில்.
        மூன்றாம் பருவ முடிவில், எனக்கு ஒரு நாள் திடீரென ஏன் கையெழுத்துப் பத்திரிக்கை நடத்தக் கூடாது எனத் தோன்றியது.  உடனே அவ்விஷயத்தை நண்பன் நாகராஜனிடம் பகிர்ந்து கொண்டேன். அவன் விரோதி நாகராஜன் ஆகிவிட்டான்.  ஏனென்றால் நான் என் மனதில் இருந்ததை சொன்னவுடன், கேவலமாக ஒரு வீரப்பா சிரிப்பை சிரித்து, இதெல்லாம் ஏண்டா உனக்கு என்று சொல்லி தொடர்ந்து சிரித்தான். நான் உடனேயே அந்தத் திட்டம் வேறு யாரிடமும் சொல்லி இது போல  அவமானப் படவேண்டாம் என முடிவு செய்து உடனே கலைத்தேன்.  நான் முடிவெடுத்த அடுத்த நொடியில், அவன் சிரிப்பு நின்றது, ஆமா நீ சொல்ற மாதிரி செஞ்சா என்ன? என்று கேட்டு மீண்டும் நண்பன் ஆனான். 
     அவ்வளவுதான் அந்த விஷயம் நண்பர்கள் சீனி, அன்வர் ஆகியோரிடம் பகிர்ந்து கொள்ளப் பட்டது.( இது போன்ற ஏதேனும் செய்ய வேண்டும் என்றால் இந்த நால்வர் அணி ஈடுபடும். சினிமா, கோயில், நண்பிகள் வீட்டு விஜயம் என்றால் என் பெயர் விடுபடும். ஏழை சொல் எங்கே எடுபடும்?) திரு சொ  சொ  மீ அவர்களிடம் சென்று பேசி அனுமதி பெற்றோம். அதன் பின்னர் பத்திரிகை ஆசிரியராக என் பெயர் முன், பின் வழியப்பட்டு ஏக மனதாக தேர்ந்தெடுத்து, (ஏனென்றால் என் மனதில் உருவானத் திட்டம் என்பதால் நண்பர்கள் சிறிதும் தயங்காமல் என் பெயரே மொழிந்தார்கள்). நாகுவின் கையெழுத்து நன்றாய் இருக்கும் என்பதனால் பிரதி ஒன்றை அவன் எழுத மற்ற பிரதிகள் xerox எடுப்பது என்றும் முடிவானது.   அதன் காகிதம் வாங்க நாங்கள் கீழ ஆவணி வீதி முழுவதும் அலைந்து,எங்கே குறைந்த விலையில் கிடைக்கும் என் கடைக் கடையாக ஏறி இறங்கி அப்பொழுது இதை எப்படி எல்லாம் மேம்படுத்த வேண்டும் என ஆலோசித்துக் கொண்டே செல்வோம்.

ஆசிரியர் தலையங்கம், ஒரு கதை, ஒரு கட்டுரை சிறு துணுக்குகள் என தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிடுவது என முடிவு செய்யப் பட்டது.  பத்திரிக்கையின் ஓவியராக junior  செந்தில்வேலன் தேர்ந்தெடுக்கப்பட, முதல் பிரதி இரு புறாக்கள் வானவில்லின் பின்னணியுடன் இருக்கும் படமும், அதன் miniature பத்திரிக்கையின் logo வாகவும் தெரிவு செய்யப் பட்டது. அப்பொழுது திரு ராஜீவ் காந்தி அவர்களால் அறிமுகப் படுத்தப் பட்ட நவோதயா கல்விமுறை தமிழகத்தில் தேவை என்ற தலையங்கம் என்னால் எழுதப்பட்டது.  அன்வர் - மு வ (முன் வழுக்கையாம்) என்ற பெயரில் "காத்திருந்தேன் காரோடு" என்ற மர்மக்கதை எழுதிக் கொடுக்க, சிறுகதை எழுத்தாளர் மற்றும் ஆசிரியரின் அனுமதி இல்லாமலேயே கதையின் முடிவில் சிறுமாற்றம் செய்து, எழுத்தாளருக்கு  ஏமாற்றம் கொடுத்தான் நாகராஜன்.  அதில் திரு சொ  சொ  மீ அவர்களின் கவிதையும் வந்தது.  ஆங்கிலப் பகுதி என்ன என்று நினைவில் இல்லை.  வெளியீட்டு விழா  நடத்த முடிவு செய்யப் பட்டது.  திரு சொ  சொ  மீ அவர்கள் ஆலோசனைக்கு இலங்க தமிழ்ப் பேராசிரியர் திரு பு.மு. சாந்தமூர்த்தி அவர்களை வெளியிடவும், முதல்வரை பிரதி பெற்றுக் கொள்ளவும் அழைத்தோம்.

விழாவின் துவக்கத்தில் நான் வெள்ளுடை வேந்தராக (ஹி  ஹி  ஹி ) வந்து தொகுத்திட, பேரா பு.மு.சா அவர்கள் வெளியிட்டு பத்திரிகை குறித்து உரையாற்றத் தொடங்கினார்.  திரு சொ  சொ  மீ அவர்கள் தான் மிகப் பெரிய தவறை செய்து விட்டதை உணரத் தொடங்கினார் போல, அவர் முகம் கருத்து சிறுத்துப் போனது. ஏனென்றால், அதில் இருந்த எந்த ஒரு சின்ன நல்ல விஷயத்தையும் குறித்து சொல்வதைத் தவிர்த்து, அட்டைப் படப் புறாவில் இருந்து அனைத்தையுமே குறை சொன்னார். நல்ல வேளையாக திரு சொ  சொ  மீ அவர்கள் கவிதை தப்பியது.  இரு புறா அமர்ந்து இருக்கின்றன அது புறான்னு  கேட்டு தெரிஞ்சுகிட்டேன் என்று ஆரம்பித்தார்.  அவர் எய்த அனைத்து அம்பினையும் தன்  சொல்லம்பினால் மறுத்து வந்தார் திரு சொ  சொ  மீ அவர்கள்.  அந்தப் புறாக்கள் தமிழும் ஆங்கிலமும் என்றும் கம்பீரமாய் அமர்ந்து இருக்கும்  ஆண்புறா ஆங்கிலம் என்றும் இணைந்து நாணியபடி அமர்ந்து இருக்கும் பெண் புறா  தமிழ் என்றும் விளக்கம் தந்தும் எங்களை, நம்மை மகிழ்சிக் கடலில் ஆழ்த்தினார்.  அதன் பின்னர் இரு பிரதிகள் மட்டுமே வந்து மறைந்து போனது வானவில்.

 (இது குறித்து நாகு, அன்வர் சீனி தன் நிலை குறித்து எழுதுவார்கள் என நம்புகின்றேன். )



3 comments:

Anvar Husain said...

அருமை..... இப்பொழுதெல்லாம் வானவில் பார்ப்பதே அரிதாகிவிட்டது. ம்ம்ம்ம்ம் . நமது கல்லூரி கால வானவில்லும் அதன் பெயருக்கேற்றார் போல் அதிகம் வராமல் அல்பாயுசில் நின்று போனது. ஒருமுறை இருமுறை வந்தாலும் அதனின் அம்சத்திற்காகவும், அழகிற்காகவும் நாம் செய்த அர்ப்பணிப்பும் , ஆர்வமும் ஆத்மார்த்தமானது. நீயே பாரேன் கிச்சா... வானவில்லில் பங்கெடுத்த அத்தனைப்பேரும் எழுதும் திறமையை சிறப்பாக வளர்த்துக்கொண்டோம். இன்று திறம்பட நம்மால் எழுத முடிகிறது என்றால் அதற்கு முதல் முக்கிய காரணம் அன்று நாம் வானவில்லிற்காக தயார்படுத்திக்கொண்ட முயற்சிகள் தான் என்பதில் துளிக்கூட ஐயமில்லை.

VJ said...

இவ்வளவு விஷயம் நடந்திருக்கா??!!!

VJ said...

"வானவில்" பெயரே அழகு. ஒவ்வொரு முறை பார்க்கும் போதும் புதிதாய் தோன்றும். அது அரிதாக காணக்கூடியது என்பதுதான் அதன் சிறப்பம்சமே. அதற்காக அது அல்பாயுசில் போனதாகக் கருதக்கூடாது. அப்பொழுது வித்திட்டது இன்று தினம் ஒரு வானவில்லாய் மலருகிறது. உங்கள் ஒவ்வொருவரின் எழுத்துக்களைப் படிக்கும் வாய்ப்பு அப்பொழுது கிடைக்கவில்லை. இப்பொழுது விருந்தே கிடைக்கிறது. மனம் நிறைகிறது.