பள்ளிப்பருவத்தில் NCC மாணவர்களின் உடை
மற்றும் அவர்களின் மிடுக்கான தோற்றத்தில் ரொம்பவும் கவரப்பட்டிருக்கிறேன்.
அவர்களின் சுறுசுறுப்பான செயல்முறைகள் கட்டுக்கோப்பான பயிற்சிகளை பார்க்க
வசீகரமாகயிருக்கும். காக்கி உடுப்பில் விரைப்பாக அவர்கள் நடந்து செல்வதைப்
பார்ப்பது கண்கொள்ளாக்காட்சி. NCC யில் சேரனுமென்ற ஆசை அளவுகடந்திருந்தும் அதற்கான முயற்சிகள்
எதுவும் எடுக்காததால் அது கைவரப்பெறாத கனவாகவாகவேயிருந்தது.
அந்த கனவையும் நனவாக்கியது என் அருமை சவுராஷ்டிரா கல்லூரி தான்...!
அந்த கனவையும் நனவாக்கியது என் அருமை சவுராஷ்டிரா கல்லூரி தான்...!
கல்லூரியில் வகுப்புகள் ஆரம்பித்து,
தோழர்கள், தோழிகள் என்று ஜே ஜேவென ........
கலகலப்பிற்கு பஞ்சமில்லாமல் காலம் செல்லத்துவங்கிய போது என் கனவு
பயிற்சிமுகாமான NCC யில் சீனிவாசனையும் கூட்டு சேர்த்துக்கொண்டு சேர்ந்தேன்.
பெருமிதமும் பூரிப்புமாக ஒவ்வொரு பயிற்சிவகுப்புகளிலும் கலந்து களித்தோம். எங்கள்
கல்லூரியின் மைதானம் சரியில்லையோ அல்லது போதிய மாணவர்கள் இல்லாத காரணமோ NCC பயிற்சி
வகுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மதியம் 3 மணி முதல் 6 மணி வரை
மதுரைக்கல்லூரி வளாகத்தில் அங்குள்ள NCC மாணவர்களுடன்
சேர்த்து நடத்தப்படும். சனிக்கிழமை வந்துவிட்டால் போதும்....! உச்சி முதல்
உள்ளங்கால் வரை சுர்.....ரென்ற ஒரு உற்சாக உணர்வு......
ஓடிக்கொண்டேயிருக்கும். காக்கி
உடுப்புகள், பூட்ஸ், தொப்பி, தொப்பியில் மாட்டவேண்டிய பாட்ச், கோழி இறகு என்று
எல்லா தளவாடங்களையும் கையோடு கொண்டுவந்துவிடுவோம். சனிக்கிழமை கல்லூரி மதியத்துடன்
முடிந்துவிடும். வகுப்பு முடிந்ததும் வேகவேகமாக மதிய உணவை சாப்பிட்டு விட்டு
கொண்டு வந்த தளவாடங்களை அணிந்துகொண்டு NCC மாணவர்களாக உருவெடுத்து தோழர்களின் கிண்டலும் தோழிகளின் சிரிப்பும் வழிநடத்த ‘டக்’ செய்யப்பட்ட
காக்கி உடையில் டக்...... டக்..... கென்று ஷூக்களின் ஓசை அந்த மலைப்பாதையில்
எதிரொலிக்க........ பஸ் பிடிப்பதற்காக சீனிவாசனுடன் ஓடிய அந்த தினங்களின் ‘திரில்’ நினைவுகள்
இன்னமும் என்னுள் ஓடிக்கொண்டிருக்கிறது.
மதுரைக்கல்லூரி மிகவும் விசாலமான
கல்லூரியாகும். அங்குள்ள மைதானமும் ரொம்ப விசாலமாகயிருக்கும். பார்வையாளர்களுக்காக
சிமெண்ட் காலரி இருக்கும். மைதானத்தின் மத்தியில் இரண்டு கல்லூரி NCC மாணவர்களும்
மொத்தமாக குழுமியதும் கம்பீரமாக பயிற்சி வகுப்புகள் நடக்கத்துவங்கும். பயிற்சிப்பிரிவிற்கு தலைமை வகிக்கும் மாணவனின்
உச்சஸ்தாயில் உரைக்கப்படும் கட்டளைகளை செவிமடுத்து செயல்புரியத்துவங்குவோம். லெப்ட்.....
ரைட்....... என்ற உரத்த சத்தத்தின் மத்தியில் கைகளையும் காலையும் மடக்காமல்
விரைப்பாக வைத்துக்கொண்டு முகத்திற்கு எதிராக இரண்டு கைகளும் மாறி மாறி வரும்படி
வீசி வீசி நடக்கும் போது வரும் பெருமித உணர்விற்கு....! ஈடுஇணையேதுமில்லை.
மைதானத்தையே ஒரு வட்டமடிப்பதுபோல் ‘பரேட்’ நடக்கும். என்று தணியுமிந்த அடிமையின் மோகம் ..?
என்பதுபோன்ற எழுச்சி எண்ணங்களின்றி லெப்ட்..... ரைட்.... மந்திரத்திற்கு
கட்டுப்பட்டு காரியமாற்றுவோம். நமது கல்லூரியில் BSC பிரிவில் படித்த
மாணவன் ஒருவனும் NCC யில் சேர்ந்திருந்தான். அவன் ‘பரேட்’ டில் நடக்கும்
போது ரொம்ப கூத்தாகயிருக்கும். தொள தொளவென்ற காக்கி உடுப்பில் ததக்க பிதக்கவென்று
சார்லி சாப்ளின் போல் அவன் சிரித்தமுகத்துடன் நடந்துவருவதை பார்த்தவுடன் ‘ப்க்’கென்று சிரிப்பு
பற்றிக்கொள்ளும். அவனும் ரொம்ப ஜாலியாயிருப்பான். ஜோக்கர் மாதிரியிருப்பான் ஆனா
நல்லா ஜோக்கும் அடிப்பான். சீனியும் நானும் பயிற்சிகளின் போது மிகுந்த கவனத்துடன்
நடந்துகொள்வோம். மாணவர்களின் கமாண்டரை மற்ற நாட்களில் கல்லூரியில் எங்காவது
சந்திக்க நேர்கையில் மிகவும் மரியாதையுடனும் பிரியத்துடனும் பழகி அவரின் நட்பை
சம்பாதித்துக்கொண்டோம். இந்தமாதிரி விஷயங்களில் சீனி ரொம்பவும் கில்லாடி. பயிற்சி
சமயங்களில் ஏதாவது தவறாக செய்துவிட்டாலோ அல்லது சிரித்துவிட்டாலோ தொலைந்தோம்..
தண்டனை கொடுத்து வறுத்துவிடுவார்கள் வறுத்து. மைதானத்தை மூச்சு இரைக்க இரைக்க
மூன்று நான்கு முறை சுற்ற சொல்வார்கள். உட்காரவுமில்லாமல் நிற்கவுமில்லாமல்
நிலையில் தவளை போல் தவ்வி தவ்வி வர
வைப்பார்கள். அந்த மாதிரி செய்யும் போது முட்டுகள் இரண்டும் முணு முணுவென
வலித்துக்கொண்டேயிருக்கும். நல்ல கொடுமையான தண்டனை தான் அது... மூன்று மணிக்கு
துவங்கும் பயிற்சி அந்த இந்தவென்று ஆறு மணிவரை இழுத்துவிடுவார்கள். பயிற்சி முடிந்ததும்.... வரிசையில் நிற்க சொல்லி...... சாப்பாத்தியும்
குருமாவும் தட்டில் வைத்துக்கொடுப்பார்கள்.
ஆஹா...! ஆய்ந்து ஓய்ந்து வந்திருக்கும் அந்த சமயத்தில் அவைகளை சாப்பிடும்
போது .....தேவார்மிதமாகயிருக்கும்..! ரசித்து ருசித்து சாப்பிடுவோம். NCC யில் நாங்களிருந்த
ஒருவருட காலத்தில் ரொம்ப ‘திரில்’லான அனுபவங்களை எல்லாம் சந்தித்தோம். ஒரு சமயம்
அதிகாலையிலேயே எழுந்து கிருஷ்ணபுர காலனியிலிருக்கும் இந்திய ராணுவ
பயிற்சிமுகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கு துப்பாக்கிகளை தூக்கிப்பிடித்த
வண்ணம் செய்யும் ராணுவ மரியாதை பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டோம். காலையிலிருந்து
மாலைவரை மாறி மாறி பயிற்சிகள் செய்துகொண்டிருந்தோம். பார்க்கும் போது
எளிதாகத்தெரியும் அந்த பயிற்சிகளெல்லாம் செய்யும் போது ‘பெண்ட்’ நிமித்திவிட்டது.
ஜே ... ஜே...வென மாணவர்கள் கூட்டம் கூட்டமாக பயிற்சி எடுத்துக்கொள்வதை பார்க்கும்
போது ரொம்ப அழகாகயிருக்கும். அதுவும் எங்களுக்கு பயிற்சி கொடுத்த ராணுவ அதிகாரிகள்
வாட்டசாட்டமாக செக்கச்செவேலென்று சூப்பராகயிருந்தார்கள். கட்டுப்பாடாகவும் ஒருமுகப்பட்ட
கவனமாகவும் அந்த பயிற்சிமுகாம் எங்களுக்கு அமைந்தது. மற்றொரு சமயம் காமராஜர் பல்கலைக்கழகம்
அமைந்திருக்கும் நாகமலை என்ற பகுதிக்கு அழைத்துசெல்லப்பட்டு துப்பாக்கி சுடும்
பயிற்சியளிக்கப்பட்டது. அம்மாடி...... அதை இப்போது நினைத்தாலும் காது ‘ஞொய்...’ என்று குடைகிறது. இரண்டு ராணுவ அதிகாரிகள் நேரடியாகவே
வருகைபுரிந்து எங்களுக்கு அந்த பயிற்சியினைக்கொடுத்தார்கள். படங்களில் அனாயாசமாக
காட்டப்படும் துப்பாக்கிச்சுடும் காட்சிகள் உண்மையில் செய்யும் போது ரொம்ப ரொம்ப
கொடுமையாகயிருந்தது. மாணவர்கள் அனைவரையும் அணியணியாக பிரித்துக்கொண்டார்கள். மலையின் அடிவாரத்தில் ஒரு ‘டெண்ட்’ மாதிரி ஒன்று
கட்டி அதில் அந்த ராணுவ அதிகாரிகள் அவர்கள் கொண்டுவந்த துப்பாக்கிகள் மற்றும்
குண்டுகளை குவித்து வைத்தார்கள். மலையை
பார்த்தபடி மூன்று முரட்டு பெட்ஷிட்களை விரித்துவைத்தார்கள். ஒவ்வொரு பெட்ஷிட்டிலும்
ஒவ்வொரு வகைத் துப்பாக்கிகளை படுக்கை வசத்தில் வைத்தார்கள். அந்த இடத்திலிருந்து
கொஞ்ச தூரத்தில் வட்டம் ஒன்று வரையப்பட்ட இரும்புப்பலகை ஒன்று
வைக்கப்பட்டிருந்தது. மூன்று பேர் கொண்ட மாணவ அணி பெட்ஷிட்டிற்கு ஒருவராக நின்று
கொள்ளவேண்டும். அந்த அதிகாரி ஆணையிட்டதும்
சடாரென்று தாவி அந்த பெட்ஷிட்டில் துப்பாக்கியை பற்றிய வண்ணம் படுத்துக்கொள்ளவேண்டும். பின்னர் அதிகாரிகள்
கொடுத்த மூன்று குண்டுகளை ஒவ்வொன்றாக பொருத்தி அந்த இரும்புப் பலகையிலிருக்கும்
வட்டத்தின் மையத்தை குறி பார்த்து சுட வேண்டும். அந்த அதிகாரிகள் மூன்று நான்கு
முறை பயிற்சி நிமித்தம் அவர்களே அதேபோல் செய்து காட்டினார்கள். அவர்கள் செய்யும் போது அசத்தலாகயிருந்தது. ‘சட்’ டென்று
தாவி...... பெட்ஷிட்டில் படுத்து .......துப்பாக்கியை ‘தட்’ டென்ற
சப்தத்துடன் பிடித்து ....... ஒரு அடி அடித்து குண்டை பொருத்தி ‘ப்ட்’டென்று குறி
பார்த்து....... அவர்கள் சுடுவதை பார்க்கையில் பிரமிப்பாகயிருந்தது. ஆனால் எங்கள்
முறை வரும்போது அத்தனை பேரும் சொதப்போ..... சொதப்பென்று.... சொதப்பினோம். தாவி
பாய்ந்து படுக்கவேண்டுமென்றால்... பலபேர் தவழ்ந்து போய் படுத்தார்கள்.
சிலபேர்களால் துப்பாக்கியை தூக்கக்கூட முடியவில்லை. குண்டைப் பொருத்தி
சுடும்போது..... துப்பாக்கியை நமது தோள்பட்டையுடன் சேர்த்து இறுக்கமாக
வைத்துக்கொள்ள வேண்டும். இல்லாவிடில்
சுட்டப்பிறகு துப்பாக்கி எதிர்விசையாக பின்புறமாக உந்தப்படும் போது.....
தோள்பட்டையில் பயங்கரமாக மோதி...... வலி உயிரை எடுத்துவிடும். இரண்டு மூன்று
மாணவர்கள் அதுபோல் அடிவாங்கி பயிற்சியிலிருந்து பின்வாங்கினார்கள். இதையெல்லாம்
பார்த்துகொண்டிருந்த எனக்கு உதறல் எடுக்க ஆரம்பித்தது. என்முறை வந்ததும் ஏதோ ஒரளவிற்கு தாவி பெட்ஷிட்டில்
படுத்து... துப்பாக்கியை பிடித்து.... குண்டை பொருத்தி..... முடிந்தளவிற்கு
இறுக்கமாக தோளோடு சேர்த்து வைத்துக்கொண்டு..... இரும்புப் பலகையிலிருக்கும்
வட்டத்தின் மையத்தை குறி
பார்த்து...............!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! சுட்டேன்.
அம்மாடி...... ஒவ்வொரு முறை சுடும்போதும் ‘டமால்’ லென்று
காதைபிளக்கும் ஓசையுடன் இரும்புப்பலகையில் மோதி..... மலையின் அடிவாரத்தில்
மீண்டும் எதிரொலித்து ... சடாரென்று
தோளில் அடித்துவிட்டு செல்லும் துப்பாக்கியென.... அந்த நாள் பூராவும்
காதுவலியுடனும் தோள்வலியுடனும் ரொம்ப அவஸ்தைப்பட்டோம். அந்த பயிற்சி முடிவதற்குள்
போதும் போதுமென்றாகிவிட்டது....... பெரும்பாலான மாணவர்கள் முகம் பேஸ்தடித்தது போல்
ஆகிவிட்டது. அந்த ஏரியா பூராவும் டமால்...... டமால்.........டமால் என்ற ஒசையில்
மண்டைக்குள் வெடிப்பது போலவே.....! ஓர் உணர்வு வந்தது. மலைமுழுவதும்
வெடிமருந்து வாசமும் கந்தக புகையுமாக ஒரே களேபரமாகயிருந்தது. இயல்பாக எனக்குள்
பிரவாகமாக ஓடிக் கொண்டிருக்கும் அஹிம்சை உணர்வுக்கும் அழகுணர்ச்சிக்கும் கொஞ்சம்
கூட ஒத்துவராத இந்த மாதிரி அரக்கத்தனம் பதிந்த பயிற்சிகள் பெருத்த ஏமாற்றத்தையும்
எரிச்சலையும் தான் கொடுத்தது. ஒருவழியாக மாலை நேரம் வந்து பயிற்சிகள் முடிந்ததும்.....
தப்பித்தோம்..... பிழைத்தோம்.... என்று பயிற்சி முகாமிலிருந்து வெளியேறி வீடு
வந்து சேர்ந்தோம். NCC யில் இருந்த காலமெல்லாம் இந்தமாதிரி பக்... பக்...குனு
வைக்கிற பயிற்சிகள் எங்களை எப்பவும் பரபரப்பாகவே வைத்திருந்தது. இந்த பயிற்சிகளுக்கெல்லாம்
உச்சக்கட்டமாக நாங்கள் கலந்துகொண்டது சைக்கிள் பயண பயிற்சியாகும். சைக்கிள் பயணம்
என்றதும் தயவுசெய்து ஜாலியாய்.....! லேசாய்.....
பூ போல பெடல் மிதித்து......மெத்தென்று சீட்டில் அமர்ந்து... ஹாண்டில் பாரை
ஸ்டைலாய் பிடித்துக்கொண்டு சொகுசாய் கொஞ்ச தூரம் போய் விட்டு வந்த பயணம் என்று
நினைத்துவிட வேண்டாம். மூன்று நாளில் போக வர சேர்த்து ஏறக்குறைய 240 கிலோமீட்டர்
சைக்கிளில் பயணம் செய்திருக்கிறோம் என்பது தெரிந்தால் தான் எங்களின் உடல்வலியை
கொஞ்சமாவது உணரமுடியும். அந்த பயணத்தில் கலந்து கொண்ட சமயத்திலெல்லாம் எவ்வளவு
தூரம் சென்று வந்தோம் என்பதெல்லாம் தெரியாது. அதிகம் கேள்விகேட்பதற்கு
அனுமதியில்லாத அமைப்பு தானே NCC. அங்குள்ள தாரக மந்திரமே ‘செய் அல்லது
சென்று விடு’ தான். ஆகவே மூன்று நாள் சைக்கிள் பயணம் போக வேண்டுமென்று
கட்டளையிட்டார்கள்; மூச்சுக்காட்டாமல் முணுமுணுக்காமல் சீனியும் நானும் கலந்து
கொண்டோம். சைக்கிளில் செல்வதென்றால் எனக்கு மிகவும் பிடித்தவொன்று ஆகவே மனசெல்லாம்
உற்சாகம் கொப்பளிக்கவே கலந்துக்கொண்டேன். சீனியை பொறுத்தமட்டில் விருப்பு
வெறுப்புகளை விட கடமைதான் பிரதானம். அந்த உணர்வுடன் தான் சைக்கிள் பயணத்தில் கலந்துகொண்டிருப்பான்
என்று கருதுகிறேன். ஏதோவொரு வாரத்தின் வெள்ளிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்து
தயாராகி மூன்று நாட்களுக்கு தேவையான துணிமணிகளுடன் எங்களை சாரதியாக
சுமக்கவிருக்கும் சைக்கிளின் சகிதம் மதுரை கல்லூரி மைதானத்தில் ஆஜரானோம்.
ஏறக்குறைய முப்பது மாணவர்கள் கலந்து கொண்ட.... நான்கு பேராசிரியர்கள் வழிநடத்த....
வரலாறு அறியாத.! ஆனால் எங்கள் வாழ்க்கைக்கும் மறவாத..! அந்த சைக்கிள் பயணம் ஜோராக
உருளத்துவங்கியது. எல்லா மாணவர்களும் பேராசிரியர்கள் உட்பட சைக்கிள் ஓட்டுவதற்கு
ஏதுவாக அரைக்கால் டவுசர் அணிந்து வந்திருந்தோம். வழியில் சைக்கிள்களுக்கு டயர்
பஞ்சர் ஆனால் சரிபண்ணுவதற்கான பஞ்சர் பேஸ்ட், வால் டியூப், ஸ்பானர், திருப்புளி,
ஸ்குரு, ஸ்போக்ஸ் கம்பிகள், ஏர் பம்ப் போன்றவைகளை மாணவ தலைவர்கள் தங்கள்
சைக்கிள்களில் கொண்டு வந்தார்கள். பயணம் துவங்குவதற்கு முன்பு ஏராளமான கட்டுப்பாடுகளையும் சட்டத்திட்டங்களையும் எங்களுக்கு
விளக்கியிருந்தார்கள். சாலையில் இரண்டிரண்டு பேர்களாகத்தான் சைக்கிள் ஓட்டி
செல்லவேண்டும். எந்தக்காரணத்தைக்கொண்டும்
குழுவை விட்டு தனியாகப்பிரிந்து செல்லக்கூடாது. வேகமாக ஓட்டி முந்தி
செல்லக்கூடாது. ரொம்ப முன்னேவோ அல்லது ரொம்ப பின்தங்கியோ வராமல் போதுமான
இடைவெளியில் தொடர்ந்து வரவேண்டும். சாப்பாடு, ஒய்வு நேரம் போன்றவைகளுக்கெல்லாம்
ஒரு குறிப்பிட்ட இடத்தில் மொத்த குழுவும் சேர வேண்டும். ஏதாவதொரு சைக்கிளுக்கு
பழுதெற்பட்டால் அந்த பழுதுசரி செய்யும் வரை அவர்களுக்கு உதவியாக உபகுழுவிலுள்ள
மாணவர்கள் காத்திருந்து பழுதுசரி செய்து அழைத்துவர வேண்டும். சிரித்துப் பேசிய படி
பயணிக்கக்கூடாது என்று அடுக்கிக்கொண்டே போனார்கள். அத்தனையும் செவிமடுத்து பெடல்
மிதித்தோம். வெயிலின் உஷ்ணம் ஏறுவதற்கு முன்பே எங்கள் பயணம் துவங்கிவிட்டதால்
ஜில்லுனு காத்து முகத்தில் பட... கேசம் அலைஅலையாய் பறக்க.... நீண்ட வரிசையில்
இரண்டிரண்டு மாணவர்களாக சைக்கிள் ஓட்டிச் செல்ல மனசுக்குள் சந்தோஷம்
குடிபுகுந்தது. கைகால்களுக்கு புது ரத்தம் பாய்ந்ததுபோல் விறுவிறுவென்றிருந்தது.
சாலைகளில் வாகனப் போக்குவரத்தும் குறைவாகயிருந்த காரணத்தால் பயண வேகம் கொஞ்சம்
துரிதமாகவேயிருந்தது. பழங்காநத்தம், காளவாசல், முடக்குச்சாலை என்று மதுரையின்
பகுதிகளை கட கடவென்று கடந்து சென்றோம். நாங்கள் ஏற்கனவே துப்பாக்கிச்சுடும்
பயிற்சியெடுத்திருந்த நாகமலை, மதுரை காமராசர் பல்கலைக்கழகமிருக்கும் பல்கலை நகர்,
செக்காணுரணி பகுதிகளை கடந்த போதெல்லாம் மனசும் உடம்பும் சுகமாகவேயிருந்தது.
மாணவர்களுக்குள் சம்பாஷனை ஏதுமின்றி சந்தோஷ பார்வை பரிமாற்றங்களை மட்டும்
செய்துகொண்டு பயணித்திருந்தோம். வழியிலுள்ள கிராம மக்களெல்லாம் குறிப்பாக
குழந்தைகள் பிரியமாக ‘டாட்டா’
காட்டினார்கள். பசுமையான
வயல்வெளிகள், வாழைத்தோப்புகள், தென்னைமரங்கள், பனைமரங்கள், கரும்புத்தோட்டங்கள்
என்று நாங்கள் செல்லும் வழியெல்லாம் இயற்கை அன்னையின் ஈடு இணையற்ற அழகை
ரசித்துக்கொண்டே சென்றோம்.
உச்சிவெயில் கிட்டவரும் போது உசிலம்பட்டி வந்தது.
எங்களுக்கும் அதுவரை பயணத்திலிருந்த ஆர்வமும் ஊசலாட ஆரம்பித்தது. பாதி உசிர்
போனமாதிரி களைத்துப்போயிருந்தோம். இன்னும்
எவ்வளவு தூரம் போகணுமோ..? என்பதை நினைக்கவே நடுக்கமாகயிருந்தது. நாள்பூரா சைக்கிள்
ஓட்டி பழக்கம் இல்லாததால் ஹாண்டில் பாரையும் ‘சீட்’ டையும் பார்க்க பார்க்க பீதி
கிளம்பியது. உட்காருமிடமெல்லாம் ரணமாய் எரிந்தது. ‘சீட்’ டில் துண்டெல்லாம்
மடித்து வைத்து உட்கார்ந்து ஓட்டினோம்.
அப்படியும் ‘சீட்’ டின் ஹீட் தணிந்தபாடில்லை. கைகாலெல்லாம் சோர்ந்து போய்
முட்டி வலி பின்னியெடுத்தது. மாடுகளுக்கு சூடுவைத்து பாரமிழுக்க வைப்பார்கள்
அல்லவா? அதுபோல் களைத்துக்கிடந்த எங்களை கடுமையான கட்டளைகள் மூலம் முடுக்கிவிட்டு
வலி வேதனையோடு பயணத்தை தொடர வைத்தார்கள். அவ்வவ்பொழுது தண்ணீர் குடிக்க, இளநீர்
அருந்த, சாலையோரமாகயிருக்கும் பம்பு செட்டுகளில் முகம் கழுவிக்கொள்ள, சாப்பிட
போன்ற சந்தர்ப்பங்களில் மட்டும் சனீஸ்வர சைக்கிளிலிருந்து கொஞ்சம் விடுதலை
கிடைக்கும். மற்ற சமயங்களெல்லாம் பெடல் மிதித்து..... மிதித்து..... குடல்
இழுத்துக்கொள்ளும் போல் ஆகிவிட்டது.! அப்பாடி ... பூமியில் கால் பதித்து நடக்குமின்பத்திற்கு
ஈடாக எதையும் சொல்லமுடியாது..! இறைவன் நமக்கு மிகச்சிறந்த பரிசாய் வழங்கிய கால்
வாகனத்தில் பயணிக்கும் போதுதான் சொர்க்கத்தை பக்கத்தில் பார்க்கலாம். மனிதன்
கண்டுப்பிடித்த வாகனங்களெல்லாம் சொர்க்கமாக தான் ஆரம்பத்தில் தெரியும் அப்புறம்
ஏதொவொரு விதத்தில் கண்டிப்பாய் நரகமாய் மாறிவிடும். நமது தேசத்தின் ஞானிகள் அனைவரும்
நடந்தே சாதித்தவர்கள்தானே. நடப்பதன் சுகத்தையும் அதன் சௌகரியத்தையும் அன்று நன்றாக
அறிந்துகொண்டோம். அம்மாடி .... ஆத்தாடி... யென்று ஆண்டிப்பட்டி
வந்துசேர்ந்தோம். எங்களை ஆறுதல்படுத்தும்
விதமாக கொதிக்கும் வெயில் குளிர துவங்கும் மாலைப்பொழுதிற்கு மாறத்துவங்கியது.
வேர்த்து விறுவிறுத்துப்போன எங்கள் மேனிகளில் மென் காற்று படும் போது
மெய்சிலிர்த்தது. அதற்கு அப்புறமுள்ள
பாதைகளெல்லாம் மலைப்பாதை போல் ஏற்றமும் இறக்குமாகயிருந்தது. எங்கள் அதிர்ஷ்டம்!
இறைவனே....! எங்களுக்கு இரக்கம் காட்டியது
போல்... அந்தப்பாதை ரொம்ப தூரத்திற்கு இறக்கமாகவேயிருந்தது. ஆஹா............ ஆஹா......... இருபுறங்களும்
வளர்ந்திருக்கும் உயர உயர மரங்களுக்கு மத்தியில் தூரத்தில் தூங்கிக்கொண்டிருக்கும்
மலைகளுக்கு நடுவில் பச்சை பசலென்ற இயற்கைவண்ணத்திற்கு இடையில் மனிதனின் கைவண்ணமான
அந்த இறக்கமான தார் சாலையில் களைத்திருந்த அத்தனை மாணவர்களும் களிப்போடும்
சந்தோஷத்தோடும் எழுப்பிய கூக்குரல்கள் அந்த பகுதியெங்கும் எதிரொலிக்க....
கால்களெல்லாம் ஓய்வெடுக்க.. கைகள் மட்டும் ஹாண்டில் பார் பிடித்தவண்ணம்......... சர......சர..........சர…….சர...... வென்று ஆகாயத்தில் பறப்பதுபோல் அன்று சைக்கிளில்
பறந்தது இன்று நினைத்தாலும் இன்பமாகயிருக்கிறது. ஏறக்குறைய 20 நிமிஷத்திற்கும்
மேலாக அந்த இறக்கத்தில் இன்பமாக பிரயாணித்திருப்போம். காற்று ஆனந்தமாக வீச..!
உடம்பிலுள்ள களைப்பெல்லாம் கணநேரத்தில்
காணாமல் போனது. உற்சாகம் பீறிட....! சொர்க்கத்தின் பாதையில் சறுக்கியதுபோலிருந்தது
அந்த நிமிடங்கள்.! அந்த பிரதேசம் முழுவதும் எங்களின் சந்தோஷ சத்தங்களில்
நிரம்பியது. பெடல் செய்வதே மறந்து போகுமளவிற்கு சைக்கிள்கள் ரொம்பத்தூரத்திற்கு
நிற்காமல் சென்றுகொண்டிருந்தது. காலையிலிருந்து
முட்டி கழண்டு போகுமளவிற்கு பெடல் செய்த கால்கள் கொஞ்சம் மூச்சு வாங்கிக்கொண்டது
அந்தத் தருணங்களில் தான். அங்கிருந்து அப்புறம் நாங்கள் சென்ற பாதைகளெல்லாம்
மிக.... மிக.... ரம்மியமானவைகளாக இருந்ததால் மனதிற்கு மிகுந்த ஆறுதலைக்கொடுத்தது.
இறக்கம் முடிந்ததும் மறுபடியும் பெடல்கள் எங்கள் உடல்களை வருத்தின.
குறைந்தசெல்விளைவு விதிபோல் எங்களை குறுகிய நேரம் மட்டுமே ஆட்கொண்டிருந்த சுகமும்
சௌகரியமும் சந்தோஷமும் கொஞ்சம் கொஞ்சமாக விலகி வியர்வையும் வலியும் வெறுப்பும் சூழ
ஆரம்பித்தது. பாதுகாப்பு அரண்போல முன்பக்கம் வழிநடத்த ஒரு மாணவத்தலைவனும் இரண்டு
பேராசிரியர்களும் அப்புறம் மற்ற மாணவர்கள் அணிவகுத்து செல்ல எல்லா மாணவர்களுக்கும் கடைசியாக மற்ற இரண்டு
பேராசிரியர்கள் அடைகாத்து வர அங்கிங்கு விலகி செல்லமுடியாதளவிற்கு நொந்து கொண்டே
சென்று கொண்டிருந்தோம். மாலைநேரமாகயிருந்தும் ரொம்ப நேரம் சைக்கிள் ஓட்டிக்கொண்டே
வந்ததால் உடம்பெல்லாம் அனல் போல் தகித்து வியர்வை வெள்ளத்தில் நனைந்து ஒரே ஒரு
குளியல் கிடைக்காதா..? என்ற ஏக்கத்தோடு அந்த ஏகாந்த பயணத்தைத்தொடர்ந்தோம்.
கேட்டதும் கொடுப்பவனே... என்பதுபோல் மறுபடியும் இறைவனின் அருட்பார்வை எங்கள்
மேல்விழுந்தது. எங்கள் ஏக்கத்தை தணிவிக்க வைகை நதி வீறுகொண்டு பாய்ந்துவரும்
வீரபாண்டி வந்தது. சாலையே கரையாகயிருக்க சலசலவென்று ஒடும் நதியை கண்டதும் மதுரை
கல்லூரி மாணவத்தோழனுடன் (ம.க.மா.தோழன்) சேர்ந்து சீனியும் நானும் சதியாலோசனை
செய்தோம். “டேய்... இது நல்ல சந்தர்ப்பம்
இந்தக்கூட்டத்திலிருந்து எப்படியாவது நாம மூணுபேரும் மட்டும் விலகி சென்று நதியை
ஒட்டியிருக்கும் தோப்புக்குள் சென்று விடுவோம். அப்புறம் இவர்களெல்லாம் சென்றபிறகு
நதியில் ஜாலியாய் ஒரு குளியலை போட்டுவிட்டு செல்லலாம். ஏன் தாமதம் என்று கேட்டால்
சைக்கிள் செயின் கழண்டுவிட்டது மறுபடியும் மாட்டிவிட்டு வருவதற்கு நேரமாகிவிட்டது
என்று சொல்லிக்கொள்ளலாம்” ம.க.மா.தோழன் சொல்ல நாங்களிருவரும் உடனே உண்மையான
ஆர்வத்துடன் ஆமோதித்தோம். திட்டம் அழகாக உருவாகியது. மற்ற மாணவர்களை விட குறைவான
வேகத்தில் சைக்கிளை செலுத்தி கொஞ்சம் கொஞ்சமாக பின்னால் வந்து கடைசியாய் வரும்
பேராசிரியர்களுக்கு கொஞ்சம் முன்னால் இருக்கும்படி எங்கள் பயணத்தைத்தொடர்ந்தோம். ஆக
மொத்தமாணவர்களுக்கும் காவல்போல் அவர்களின் பின்னால் வந்துகொண்டிருந்தோம். சரியான
சந்தர்ப்பத்தை எதிர்ப்பார்த்துகொண்டேயிருந்தோம். தூரத்தில் ஒரு இடத்தில் பாதை ‘எஸ்’ வடிவத்தில் வளைந்து
செல்வதை பார்த்ததும் சுறுசுறுப்பாகிவிட்டோம். அதுவும் அந்த வளைவுப்பாதையை
ஒட்டி.... ஒரு சிறு மண்பாதை கீழிறங்கி.... நதி செல்லும் வழியிலிருக்கும் எல்லை அய்யனார்
கோவிலொன்றிற்கு சென்றது. “அட்றா சக்கை.....!” முடிவு செய்துவிட்டோம். மாப்பிள....!
இதாண்டா நாம தப்பிச்செல்லக் கூடியதற்கு சரியான திருப்பம். உடம்பிலுள்ள ஒவ்வொரு
நரம்புகளிலும் ஆர்வமும் திகிலும் ஒருசேர பரவியது. தப்பினால் ‘தண்’ ணென்ற தண்ணீர்....! மாட்டினால் ‘விண்’ ணென்ற தண்டனை....!
அந்த வளைவுப்பாதை நெருங்க நெருங்க இதயத்துடிப்பு எகிற ஆரம்பித்தது. நான் சீனியை
பார்க்கிறேன் அவன் ம.க.மா.தோழனைப் பார்க்கிறான். மாணவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக அந்த
வளைவுப்பாதைக்குள் நுழைந்து திரும்பி மறைந்து கொண்டிருந்தார்கள். கடைசியாய் வந்து
கொண்டிருந்த பேராசிரியர்கள் ரொம்ப மெதுவாய் வந்து கொண்டிருந்ததால் நாங்கள் அந்த
வளைவுப்பாதைக்குள் நுழைந்த அந்தக்கணத்தில் எங்களுக்கு முன்னாடியும் யாருமில்லை
எங்களுக்கு பின்னாடியும் யாருமில்லை. அந்த மொத்தசாலையில் நாங்கள் மூவர் மட்டுமே
இருந்ததுபோல் தனியாகயிருந்தோம். அவ்வப்பொழுது எங்களை ஆச்சரியப்படுத்தும்
இறைவனுக்கு நன்றி செலுத்திவிட்டு கொஞ்சம் கூட தாமதிக்காமல்..... இடதுபுறமாக
கீழிறங்கும் அந்தமண்பாதையில் சைக்கிளை சடாரென்று திருப்பி மடமடவென்று..... மூவரும்
ஒருவர் பின் ஒருவராக படு வேகமாக கீழேயிறங்கி நதியோரமிருந்த அய்யனார் கோவிலுக்குள்
நுழைந்து ஒளிந்துக்கொண்டோம். மிகப்பெரிய காரியத்தை சாதித்துவிட்ட உணர்வோடும்
எகிறும் இதயத்துடிப்போடும் ஏராளமான சந்தோஷத்தோடும் மூச்சுக்காட்டாமல் சைக்கிள்களை
சரித்துப்போட்டுவிட்டு கோவில் சுவரோடு சுவராய் ஒட்டி நின்று காத்திருந்தோம்.
எங்களுக்கு பின்னால் கடைசியாக வந்துக்கொண்டிருந்த பேராசிரியர்களின் பேச்சு சப்தம்
எங்கள் தலைக்குமேல் கடந்து சென்றதும் கூட்டிலிருந்து விடுப்பட்ட பறவைகள் போல
உற்சாகக்கூக்குரல்களுடன்......! ஓடும்
நதியில் ஓடிப்போய் விழுந்தோம். ஆஹா.........! ஆஹா...........! அட...... அட... ஊஊஊஊஊஊஒ... ஜில்லென்ற தண்ணீரில் உடம்பு பட்டதும்
‘குபுக்’கென்று குதூகலம் பீறிட்டுக்கிளம்பியது. வெந்து நொந்து போய்
வியர்வைதேசமாயிருந்த தேகம் சிலிர்த்தது. குளிர்ந்து களித்தது. குளித்து
மகிழ்ந்தது. களைப்பு வியப்பாய் மறைந்தது.
வெறுப்பு சிரிப்பாய் மாறியது. மூவரும் முங்கி முங்கி குளித்தோம். நதி நீரை
அள்ளி அள்ளிக்குடித்தோம். எப்படி வந்தோம்..? எங்கே போகிறோம்..? என்ற
சிந்தனையெல்லாம் எங்கோ போயிற்று..! நீரின்றி உலகமையாது எவ்வளவு உண்மையான கூற்று..!
வெயிலும் களைப்பும் எங்களை வாட்டிய போது வெளிப்பட்டது வியர்வை நீர். எங்களை
குளிரவைத்து குதியாட்டம் போட வைத்து குஷியாக்கியது நதி நீர். பயமின்றி பதட்டமின்றி
பரிதவிப்பின்றி இயற்கை அன்னையின் மடியில் இறைவனின் பாதுகாப்பில் பூலோக
சொர்க்கத்தில் நேரம் கரைவதே தெரியாமல் குளித்து மகிழ்ந்தோம். இருள் எங்களை சூழ
ஆரம்பித்ததும் சுதாரித்துக்கொண்டோம். மறுபடியும் எங்கள் காமாண்டரின்
கட்டளைகளைகளும் தண்டனைகளும் புத்திக்கு உரைத்ததும் மனசேயில்லாமல் வைகை
நதியிடமிருந்து விடைப்பெற்று தலையையும் உடம்பையும் துவட்டிவிட்டு புதிதாக
பிறந்ததுபோல புத்துணர்ச்சியுடன் சைக்கிள் சவாரியை விட்ட இடத்திலிருந்து
தொடர்வதற்காக மீண்டும் அந்த மண்பாதை வழியாக மேலேறி சாலையை அடைந்தோம்.
வெற்றிக்களிப்புடன் மேலேறி வந்துப்பார்த்தால் பகீரென்றது. மையிருட்டாய் பாதை
வெறிச்சோடிக் கிடந்தது. ஆள் அரவம் ஏதுமின்றி இருட்டு கொட்டிக்கிடக்க.....! அந்த
வனாந்தரப்பகுதியில் அனாதையாய் ஆதரவின்றி தனித்து விட்டது போல் உணர்ந்தோம். குப்’பென்று வியர்த்துப்போனது. தப்பு செய்துவிட்டோமோ...? கண்ணுக்கெட்டியத்தூரம்
வரை இருட்டுத்தவிர வேறொன்றும் தெரியவில்லை. சரி துணிந்தபின் துக்கமெதற்கு...?
நட்சத்திரங்களும் நிலவும் வழிகாட்ட..... பெடல்களை விடு விடுவென்று மிதித்து
இருட்டுக்குள் எங்கள் ‘திக்’ ‘திக்’ திகில்
பயணத்தைத்தொடர்ந்தோம். எங்கள் சக்திக்கு மீறிய வேகத்தில் சீறி பாய்ந்து சென்றோம்.
நேரம் ஓடிக்கொண்டேயிருந்தது.
சைக்கிள்களும் உருண்டுகொண்டேயிருந்தது. மீண்டும் மீண்டும் மரங்களும்
இருட்டும்தான் எங்கள் கண்களுக்குப்பட்டது. எங்கள் குழு நண்பர்களுடன் எப்படியாவது
சேர்ந்துவிடவேண்டுமென்ற ஒரே ஆசைமட்டும் தான் உள்ளமெங்கும் ஒடிக்கொண்டிருந்தது. ‘கண்துஞ்சார்
மெய்வருத்தம் பாரார் கருமமே கண்ணாயினர்’ என்ற திருக்குறள் வாக்கிற்கேற்ப
எந்தவிடத்திலும் நிறுத்தாமல் ஓய்வெடுக்காமல் சைக்கிள்களை
ஓட்டிக்கொண்டேயிருந்தோம். நதியில் குளித்த
குளிர்ச்சியெல்லாம் புஸ்வானமாய் போய்……!!!!!!
மறுபடியும் வியர்வை வெள்ளத்தில் குளித்தோம். எங்களை விட்டு கொஞ்ச நேரத்திற்கு
முன்பு விலகியிருந்த பயமும் பதட்டமும் பரிதவிப்பும் மீண்டும் வந்து ஒட்டிக்கொண்டது. இருள்......
இருள்...... இருள்...... ஓயாத.. ஒழியாத.... இருள்.... திரும்பும்
திசையெங்கும்...... செல்லும் வழியெங்கும்...... பாடாய்படுத்தியது. பெடல்கள் மிதிப்பதை
மட்டும் நிறுத்தவேயில்லை. மெய்வருத்த கூலி தந்தது. கண்டோம்... கண்டோம்...
கண்ணுக்கினியனக் கண்டோம். ஆம்........ தூரத்தில் எங்களின் சக மாணவர்கள், சைக்கிள் பயணத்தில் சக்கையாய் போனவர்கள்,
சாலையோரத்தில் வரிசையாகப்படுத்துக்கிடந்த அந்த கண்கொள்ளாக்காட்சியை கண்டோம்.
அப்பாடா...... என்றிருந்தது. ஆண்டவா.... நன்றி ஆண்டவரே...! பாசம், நேசம்,
பாதுகாப்பு என்ற வார்த்தைகளின் ஆழமான அர்த்தத்தை நன்றாக உணரமுடிந்தது. தாய்ப்பசுவைக்
கண்டதும் ஓடும் கன்றுக்குட்டிகளாக ஓடிப்போய் எங்கள் கூட்டத்துடன்
சேர்ந்துகொண்டோம். நல்லவேளை! எல்லோரும் களைத்துப்போய் படுத்துக்கிடந்ததால்....!
நாங்கள் வந்ததை யாரும் கவனிக்கவில்லை. நிம்மதிப் பெருமூச்சுடன் எதுவுமே நடக்காதது
மாதிரி நல்ல பிள்ளைகள் போல் நாங்களும் அவர்களுடன் சேர்ந்து சாலையின் ஓரத்தில் படுத்துக்கொண்டோம். நன்றாக
தூங்கவும் செய்துவிட்டோம். அப்புறம் அனைவரும் ஒருசேர உசுப்பப்பட்டு மீண்டும்
பயணிக்கப்பட்டு கம்பம் ஊரை தாண்டியுள்ள கூடலூர் என்ற சிற்றூரிலுள்ள
அரசுப்பள்ளிக்கூடம் ஒன்றிற்கு அழைத்துச்செல்லப்பட்டோம். தங்குமிடத்தைக் கண்டதும் அவ்வளவு ஆறுதலாகயிருந்தது. அங்கு
இதேபோல் வேறு ஊரிலிருந்து சைக்கிள் மூலம் வந்திருந்த மற்றுமொரு குழுவினர்
இருந்தனர். அனைவருக்கும் சேர்த்து இரவுணவு பரிமாறப்பட்டது. பின்னர் பள்ளிக்கூடத்து
பெஞ்சுகளில் இரவுறக்கம் அரங்கேறியது. கனவுகளுக்கு வேலையில்லாமல்
அடித்துப்போட்டதுபோல் துங்கினோம். மறுநாள் ‘இடுக்கண் வருங்கால் நகுக அதனை அடுத்தூர்வ தஃதொப்பதில்’ என்ற பொய்யாமொழிக்கேற்ப இனிமையாக விடிந்தது. பரபரவென்று
எழுப்பப்பட்டு, குளித்து தயாராகி, உணவருந்தி
பேருந்தொன்றில் ஏற்றப்பட்டோம். முதல் நாள் அனுபவத்திற்கு அப்படியே
எதிர்மறையாக சுகமான சௌகரியமான பயணம் துவங்கியது.
சுத்தமான காற்று சுகமாக வீச சத்தமின்றி சர....சர....வென்று இருபுறமும்
விலகிசெல்லும் இயற்கை அழகுகளை ரசித்துக்கொண்டே...! நிம்மதியோடு பிரயாணித்தோம்.
லோயர் கேம்ப் வரும்போது மலைப்பாதை ஆரம்பமாகியது. அந்தப்பாதையின் எல்லையற்ற
பசுமையும் புதுசு புதுசாய் பூத்திருக்கும் மலர்களும் மரங்களும் ஆபத்தான வளைவுகளும்
இன்னும் குளிர்ந்த காற்றும் கண்களையும் கருத்தையும் கவர்ந்தது. குமிளி தாண்டியதும்
தேக்கடி வந்துவிட்டது. தேக்கடி அருமையான இடம். தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும்
எல்லைக்கோட்டில் அமைந்த அமைதியான அழகான பகுதி. அங்குள்ள சமீபத்தில் மிகப்பெரிய
பிரச்சனைக்குள்ளாகியிருக்கும் முல்லை பெரியாறு நீர்த்தேக்கத்தில் படகு சவாரி
செய்தோம். மொட்டை மொட்டை மரங்களாக நடப்பட்டிற்கும் அந்த ஆழமான ஏரியில் பயணிக்கும்
போது காட்டு யானைகள், மான்கள், பல காட்டுமிருகங்கள் போன்றவைகளை பார்க்கும்
அருமையான வாய்ப்புக்கிடைத்தது. அந்த தினம் முழுவதும் ஆனந்த நிகழ்ச்சிகளால்
கோர்க்கப்பட்ட அற்புதமான நாள்மாலையாகயிருந்தது. மாலைப்பொழுது நெருங்கும் சமயத்தில்
மறுபடியும் பேருந்தில் பிரயாணித்து கூடலூர் பள்ளிக்கூடத்தையடைந்தோம். இரவு அங்கு
தங்கிவிட்டு மறுநாள் அதுவரை எங்களை வதைக்காமலிருந்த சைக்கிள் சத்துருவின் சகிதம்
விட்டுப்போன ‘லொடக்... லொடக்....’ பயணத்தைத் தொடர்ந்தோம். வந்த வழிகளை
கடந்து தாண்டினோம். வீரபாண்டியில் வைகை நதியை கண்டதும் கரைபுரளும் காதலோடு
பார்த்துக்கொண்டே கடந்தோம். வரும்போது வெகுநேரத்திற்கு எங்களுக்கு ஓய்வு கொடுத்த
அந்த இறக்கமான பாதை திரும்பி போகும்போதும் எங்களிடம் இரக்கமாகவே நடந்துகொண்டது. ஆமாம்.....
அந்தவிடத்தைக்கடக்கும் போது அவ்வளவு கடினமாகயிருக்கவில்லை. அந்தா... இந்தாவென்று.....
மிதித்து..... மிதித்து...... நிலவு உதிப்பதற்கு முன் மதுரை வந்து சேர்ந்தோம்.
சே........ சுருக்கமாக சொன்னால் நொந்து நூலாகி வீடுவந்து சேர்ந்தோம். அளவுக்கு
மீறினால் அமிர்தமும் நஞ்சுதானே. சைக்கிளை வைத்துக்கொண்டு பேருந்து வேலை வாங்கினால்
நன்றாகவாயிருக்கும்? எங்களின் ஆரம்பகால ஆர்வமெல்லாம் அவிந்து போய்..... அளவுகடந்த
கட்டுப்பாடுகளிலும் சக்திக்கு மீறிய அதேசமயத்தில் சலிப்பையும் பயத்தையும் ஒருசேர ஏற்படுத்தும் பயிற்சிகளிலும்
வெறுத்துப்போன நானும் சீனியும் அந்த முதல்
வருடத்தோடு NCC யிலிருந்து தப்பித்தோம் பிழைத்தோமென்று விலகி
வந்துவிட்டோம்.
இன்னும் உருளும்.....
3 comments:
துப்பாக்கிச் சுடும் பயிற்சி என்றவுடன் இன்ஸ்பெக்டர் பதவிக்கான பயிற்சியின் ஒரு பகுதியாக டெல்லியில் உள்ள CRPF கேம்பில் எங்களுக்கு போலீஸ் பயிற்சி அளித்தது நினைவுக்கு வருகிறது. மூன்று நாட்கள் காலை மாலை பரேட் தவிர துப்பாக்கி சுடும் பயிற்சியும் அளிக்கப்பட்டது. சர்வீசில் இருக்கும் போலீஸ் அதிகாரிகள் பயிற்சி அளிக்க முதலில் மிகுந்த ஆர்வத்துடன் துவங்கிய பயிற்சி மூன்றாம் நாள் முடிவில் லொடக் என்று முடிந்தது. சினிமாவில் சர்வ சாதாரணமாக தோன்றும் துப்பாக்கிச்சுடும் காட்சிகள் நிஜத்தில் செய்யும்போது கொடுமைதான். தோள்பட்டை வலி பின்னி எடுத்துவிட்டது. அந்தப் பயிற்சி முடிந்தவுடன் மாலை பரேட் வேறு. ஒரு சிறுவனின் தலையில் ஸ்ட்ரா போட்டு சக்தியெல்லாம் உறிஞ்சுவது போல் ஒரு விளம்பரம் வருமே, அது போல் வீடு திரும்புவோம். எப்படா இந்த பயிற்சி முடியும் என்று ஆகிவிட்டது.
இடதுபுறமாக கீழிறங்கும் அந்தமண்பாதையில் சைக்கிளை சடாரென்று திருப்பி மடமடவென்று..... மூவரும் ஒருவர் பின் ஒருவராக படு வேகமாக கீழேயிறங்கி நதியோரமிருந்த அய்யனார் கோவிலுக்குள் நுழைந்து ஒளிந்துக்கொண்டோம். அப்பா! செம த்ரில்!!
உச்சிவெயிலில் உசிலம்பட்டி,
அம்மாடி ஆத்தாடி என்று ஆண்டிப்பட்டி,
பெடல் மிதித்து குடல் இழுத்து,
பெடல்கள் உடலை வருத்தின,
சீட்டின் ஹீட்,
சைக்கிள் சத்துரு என்று
சனீஸ்வர சைக்கிள் நன்றாகவே உருண்டிருக்கிறது.எப்போது முடிந்தது என்றே தெரியவில்லை.
ஆனாலும் அந்த ரணகளத்திலும் கிளுகிளுப்பாய்தான் இருந்திருக்கிறீர்கள் !!!!!!
Post a Comment