Monday, 18 March 2013

வீரத் தாய் வேலு நாச்சியார்

"வீரத் தாய் வேலு நாச்சியார்" என்ற நாட்டிய நாடகம், கடந்த சனிக் கிழமை (16-3-2013) அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தில் நடை பெற்றது. பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை எதிர்த்து வெற்றிக் கொடி நாட்டிய ஒரே அரசி என்ற அவரின் வாழ்க்கை சரித்திரம் நாட்டிய நாடகமாக நடத்தப்பட்டது. இதன் தயாரிப்பாளர் ம.தி.மு.க பொதுச் செயலாளர் திரு வைகோ என்பது குறிப்பிடத்தக்கது.

             தமிழக அரசின் அங்கீகரிக்கப்பட்ட திருவள்ளுவர் படத்தை வரைந்த திரு வேணுகோபால் சர்மாவின் புதல்வர், திரு ஸ்ரீ ராம் சர்மா, பல்வேறு ஆவணங்களின் அடிப்படையில் இதன் வசனம் மற்றும் கதை அமைப்பை ஏற்படுத்த, திருமதி மணிமேகலை சர்மா இதன் நடன அமைப்பை உருவாக்கி உள்ளார். வேலு நாச்சியார் சிவகங்கை சமஸ்தானத்தின் ராணியான,  அவர் கணவர் முத்து வடுகநாதர் ஒரு பிரதோஷ நாளில், இறைவனை வழிபட செல்லும்பொழுது, ஆங்கிலேய அதிகாரி கர்னல் பென்ஜோர் என்பவனால் கொல்லப்பட, தலைமறைவு வாழ்க்கை மேற்கொள்ளும் நாச்சியார்,  மருதிருவரின் துணையோடும், ஏனைய குறுநில மன்னர்களின் துணையோடும், ஹைதர் அலி தந்த போர்த் தளவாடங்களைக் கொண்டும் எட்டு ஆண்டுகளுக்குப் பின் தன்  தாய் மண்ணை மீட்டெடுத்து, கர்னல் பென்ஜோரையும் மன்னித்து, பின் தன்  மண்ணை நல்ல விதமாய் ஆண்ட கதை.
இதில் "உடையாள் " என்னும் தாழ்த்தப்பட்ட குலத்தை சேர்ந்த பெண்மணி, அரசியை காப்பாற்ற மாறு கை, மாறு கால் வாங்கப்பட்டு, தலை துண்டிக்கப்பட்டு இறக்கிறார். பின்னர் பெண்களைக் கொண்ட படையை ஏற்படுத்தும் நாச்சியார் உடையாளின் பெயரை தன் படைக்கு சூட்டி அவருக்கு மரியாதை செய்கிறார். போரில் ஒரு பகுதியாக குயிலி என்னும் பெண் தன்  உடலில் எண்ணை ஊற்றி, தீ வைத்துக் கொண்டு ஆங்கிலப் படையினரின் தளவாடக் கிடங்கை நாசமாக்குகிறார். இவ்விரு கட்சிகளும் நெஞ்சை உருக்கும் விதமாக கட்சி அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பாராட்டத்தக்கது.

        நடனம் ஆடிய திருமதி மணிமேகலை சர்மா நல்ல முக பாவத்தைக் காட்டினர் பின்னால் ஒலித்தக் குரல்களும் பிரமாதமாய் இருந்தது. ஹைதர் அலி வரும் காட்சியில் நாகூர் ஈ.எம். ஹனிபாவின் குரலைக் கேட்டபின் அவரின் இறைவனிடம் கையேந்துங்கள் பாடல் இரு நாட்கள் மனதில் ரீங்காரம் இட்டுக் கொண்டு இருந்தது.

               இன்னும் காட்சி அமைப்பில் அழுத்தம் கொடுக்க  வேண்டும். கொரில்லாப் போர் முறையை முதன் முதலில் பாரதத்தில் அறிமுகம் செய்தது இவர் என்ற தவறான கருத்தை கொடுத்து இருக்கிறார்கள். இவருக்கு முன்னதாக வீர சிவாஜி அந்த முறையை உபயோகித்து உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது. பிரிட்டிஷ் படையிடம் தோற்ற மன்னர்கள்/அரசிகள் பெயரே முன்னிறுத்தப் படுகிறது, இவர் போல் வெற்றி கொண்டவர்களின் கதை கூறப்படுவதில்லை என்பது வருத்தம் தருகிறது. வீர சாவர்கர் தன நூலில் மாவீரன் அலெக்சாண்டரை புருஷோத்தமன் வென்றான், அனால் அது மறைக்கப் பட்டுள்ளது என்று சொல்கிறார். இது நம் நாட்டு சாபக் கேடு போலும். வெற்றிக் கதைகள் கூறப் படுவதில்லை. தோல்வியே முன்னிறுத்தப் படுகிறது.
            இதில் முக்கிய கதாப் பாத்திரங்கள் தவிர பிறர் தில்லி நாடக மற்றும் நாட்டிய மாணவர்கள்/மாணவிகள் என்பதும் இரு நாள் பயிற்சியில் மிக அருமையான நாட்டியத்தை தந்தார்கள் என்பதும் அவர்களின் திறமையை கண்டு தலை வணங்க வைத்தது

              விழாவின் இறுதியில் உணர்ச்சி வசப்படாமல் நிதானமாக வைகோ பேசியது மனதை கொள்ளை கொண்டது. "திரிபுரம் எரித்த திரிசடைக் கடவுள்" என்று அவர் சொன்னவுடன், சிவபெருமான் மீதிருந்த பக்தி மிகுந்தது என்பதே உண்மை.

         இந்த நாட்டிய நாடகம் தங்கள் பகுதியில் நடைபெற்றால் தவறாமல் பாருங்கள், நம் நாட்டின் வெற்றி சரிதத்தை அறியுங்கள்

Thursday, 7 March 2013

திரு சொ.சொ.மீ சொற்பொழிவு.

திரு சொ சொ மீ அவர்கள் மலேசியாவில் நிகழ்த்திய சொற்பொழிவு.